அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் திமுக சார்பில் அண்ணா, கலைஞர் முழு உருவ வெண்கல சிலைகள், ஒன்றிய திமுக அலுவலகம், தேவனூரில் மறைந்த முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியம் பெயரில் கட்டப்பட்ட நூலகம் திறப்பு விழா நடந்தது.
இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “மொழிப்போர் தியாகி சின்னசாமி பிறந்த மண் அரியலூர். கல்லக்குடி ரயில் போராட்டத்தின்போது கலைஞர் அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழகத்துக்கு உரிய நிதியை ஒன்றிய அரசு தரவில்லை. மாறாக 100 நாள் வேலை திட்டத்தை ஒன்றிய அரசு முடக்குகிறது. இதற்கு அதிமுக துணை நிற்கிறது. தற்போதும் துணை நிற்கிறது என சொல்ல முடியாது. ஒன்றுக்குள் ஒன்றாகி விட்டது என்று சொல்லலாம். விரைவில் பாஜக வசம் அதிமுகவை எடப்பாடி சரண்டர் செய்வார். பாஜகவுக்கு எடப்பாடி பயப்படலாம், ஸ்டாலின் பயப்பட மாட்டார்.
ஒட்டுமொத்த தமிழகத்தை எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அடகு வைக்க பார்க்கிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் பாசிச பாஜக, அதிமுகவுக்கு உரிய பாடத்தை புகட்ட வேண்டும். 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற அனைவரும் பணியாற்ற வேண்டும். அதிமுக கூட்டணியை கிளீன் போல்டாக்க வேண்டும்” என்று கூறினாா்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், ‘‘இந்த தேர்தலில் நமக்கு கிடைக்கும் வெற்றியின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் நம் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான, தமிழ்நாடு மக்களின் நலன்களுக்கான திட்டங்களை நாம் தொடர்ந்து செயல்படுத்துவோம்’’ என்று பேசினாா்.
ஃபரூக் அப்துல்லா மீதான தாக்குதல் சம்பவம் ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாதவை – முதல்வர்
