அமெரிக்கா, ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் மீதான கடல்வழி வர்த்தகத் தடையை (Maritime Blockade) அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. இது ஈரானின் உணவுப் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க கடற்படை ஈரானின் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மற்றும் அதன் துறைமுகங்களுக்குச் செல்லும் பாதைகளை முழுமையாகக் கண்காணித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஈரானுக்குச் சென்றுகொண்டிருந்த சுமார் 9.83 லட்சம் டன் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல்கள் ஈரான் துறைமுகங்களில் இறக்க முடியாதபடி முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த வர்த்தக முடக்கத்தால் ஈரானில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் அரிசி விலை சுமார் 7 மடங்கு அதிகரித்துள்ளது. சமையல் எண்ணெய் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது. பிப்ரவரி 2026-க்குப் பிறகு உணவுப் பொருட்களின் விலை சுமார் 40% வரை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஈரான் தனது உணவுத் தேவையில் சுமார் 70%-ஐ உள்நாட்டிலேயே உற்பத்தி செய்தாலும், சில முக்கியப் பொருட்களுக்கு இறக்குமதியையே நம்பியுள்ளது:
சோளம் 89%, சமையல் எண்ணெய் 91%, அரிசி 77% இறக்குமதி செய்கிறது. அமெரிக்காவின் இந்தத் தடையால் இந்த முக்கியமான பொருட்கள் நாட்டுக்குள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியைச் சமாளிக்க ஈரான் ரஷ்யா போன்ற நட்பு நாடுகளுடன் இணைந்து காஸ்பியன் கடல் வழியாக தானியங்களை இறக்குமதி செய்ய முயற்சி செய்து வருகிறது. இருப்பினும், காஸ்பியன் கடல் பகுதி ஆழம் குறைவானது என்பதால், பெரிய சரக்குக் கப்பல்களைப் பயன்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், ஈரானின் பொருளாதாரத்தை முடக்க இந்த முற்றுகையைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதே சமயம், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் மத்தியஸ்தத்துடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளும் ஒருபுறம் நடந்து வருவது ஆறுதல் தருகிறது.
”மெலோனி தைரியம் இல்லாதவர் ” என இத்தாலி பிரதமரை சாடிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
