தமிழகத்தில் ஆட்சியமைப்பைச் சுற்றியுள்ள அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரி கட்சிகள், தமிழக வெற்றிக கழக தலைவர் விஜய் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்க வாய்ப்பு உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற்றுவிட்டதாகவும், இதன் அடிப்படையில் ஆட்சி அமைக்க உரிமைக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் தொங்கு சட்டமன்ற நிலையை உருவாக்கிய நிலையில், பல்வேறு கட்சிகளின் ஆதரவு அரசியல் சமன்பாட்டை மாற்றியமைத்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ,விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள், தவெக தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆதரவுகள் மூலம் 118 உறுப்பினர்களின் எண்ணிக்கையை விஜய் எட்டியுள்ளதாகவும், அதனால் ஆட்சியமைக்கும் உரிமையை கோருவதற்கான சூழல் உருவாகியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆளுநருடன் நடைபெற்ற ஆலோசனையிலும் பெரும்பான்மை ஆதரவு குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், தமிழகத்தில் அடுத்த அரசை அமைப்பது குறித்து அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. விஜய் தலைமையிலான அரசு உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
