தொடர்ந்து மூன்றாம் நாளாக தமிழக சட்டப்பேரவை இன்று கூடி இருக்கும் நிலையில், தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தமிழக முதல்வர் விஜய் முன்மொழிந்தார்.
இந்நிலையில் பேரவையில் பேசிய காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ராஜேஷ்குமார், தவெக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக கூறினார். தமிழ்நாட்டில் பாஜக மறைமுகமாக ஆட்சி செய்ய கூடாது என்பதற்காகவே தவெக-விற்கு ஆதரவு அளிப்பதாக குறிப்பிட்டார். மதச்சார்பற்ற 5 காட்சிகள் சேர்ந்து ஆதரவளித்து தான் தவெக அரசு ஆட்சியமைக்கும் அளவிற்கு பெருபான்மை பெற்றது என்று குறிப்பிட்டார்.
பின்னர் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ செல்லசுவாமி, குடியரசுத்தலைவர் ஆட்சியை தடுக்கவே தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளதாக குறிப்பிட்டார். மக்களுக்கு பாதகமான திட்டங்களை செயல்படுத்த நினைத்தால் அதனை எதிர்க்க தங்களது கட்சி தயங்காது என்றார்.

தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னிஅரசு, ஆளுநர் ஆட்சியை தடுக்கவே இந்த அரசுக்கு ஆதரவு அளித்துள்ளதாக குறிப்பிட்டார். மாநில உரிமையை பாதுகாப்பதில் இந்த அரசு உறுதியாக இருக்க வேண்டும், சமரசம் இல்லாமல் செயல்பட வேண்டும் என்றார். பின்னர் பேசிய ஐ.யூ.எம்.எல் கட்சி எம்.எல்.ஏ ஷாஜகான், பாஜக அரசின் சூழ்ச்சியில் தமிழ்நாடு சிக்கி விட கூடாது. திமுக அரசின் திட்டங்கள் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
