
பள்ளி நேரத்திற்குப் போதிய பேருந்து வசதி இல்லாததால் தினமும் காலதாமதமாக வந்து கல்வி பாதிக்கப்பட்ட 29 அரசுப் பள்ளி மாணவ-மாணவியருக்கு, சின்னத்திரை பிரபலம் ‘கேபிஒய்’ பாலா தனது சொந்தச் செலவில் 1.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான உயர்ரக மிதிவண்டிகளை (Bicycles) இலவசமாக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கூவனூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கூவனூரைச் சுற்றியுள்ள எடையூர், சிறுபனையூர், மிலாரிப்பட்டு, புதிய ஏரி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 29 மாணவ-மாணவியர் பயின்று வருகின்றனர்.
மாணவர்களின் கல்வி பாதிப்பு:
இவர்கள் வசிக்கும் கிராமங்களில் இருந்து பள்ளி நேரத்திற்குச் சரியான பேருந்து வசதி இல்லாததால், மாணவர்கள் தினசரி 7 முதல் 8 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து வர வேண்டிய சூழல் இருந்தது. இதனால் அவர்கள் அடிக்கடி பள்ளிக்குக் காலதாமதமாக வந்ததோடு, அவர்களின் கல்வியும் பெரிதும் பாதிக்கப்பட்டது. பொதுவாக 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே அரசு சார்பில் மிதிவண்டிகள் வழங்கப்படும் நிலையில், தங்களின் துயரைக் கணக்கில் கொண்டு 9 மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் தங்களுக்கும் மிதிவண்டிகள் வழங்க வேண்டும் என மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திடமும், ‘கேபிஒய் பாலா நற்பணி மன்றத்தினரிடமும்’ கோரிக்கை விடுத்திருந்தனர்.
சொந்தச் செலவில் மிதிவண்டிகள்:
மாணவர்களின் இந்த நியாயமான கோரிக்கையை அறிந்த சின்னத்திரை நடிகர் பாலா, உடனடியாகத் தனது நற்பணி மன்றத்தின் மூலமாக சுமார் 1.5 லட்சம் ரூபாய் மதிப்பில் 16 மாணவர்கள் மற்றும் 13 மாணவியர் என மொத்தம் 29 பேருக்கு அண்மையில் சந்தைக்கு வந்த உயர்ரக மிதிவண்டிகளை விலையில்லாமல் வழங்கி அசத்தினார். மிதிவண்டிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக, பள்ளி மாணவ-மாணவியருடன் இணைந்து கேக் வெட்டி பாலா தனது பிறந்தநாளைக் கொண்டாடியதுடன், அவர்களுடன் சேர்ந்து மிதிவண்டி ஓட்டித் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

செய்தியாளர்கள் சந்திப்பு – பாலா பளிச் பதில்:
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாலா தெரிவித்ததாவது :
மிதிவண்டி உதவி குறித்து: “கூவனூர் அரசுப் பள்ளி மாணவர்கள் 8 கிலோமீட்டர் நடந்து வருவதாக என் நற்பணி மன்ற நிர்வாகிகள் மூலம் தகவல் கிடைத்தது. என் பிறந்தநாளை ஒட்டி அவர்களுக்கு உடனடியாக இந்த உதவிகளைச் செய்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி” என்றார்.
தற்போதைய தவெக அரசு குறித்த கேள்விக்கு: “இந்த அரசைப் பற்றி விமர்சிக்கும் அளவுக்கு எனக்குத் தகுதியும் இல்லை, அதற்கான அரசியல் அறிவும் இல்லை” என்று தந்திரமாகப் பதிலளித்தார்.
இடைத்தேர்தல் மற்றும் அரசியல் வருகை குறித்து: “எனக்கு அரசியல் பற்றிய நோக்கமே கிடையாது. என்னால் முடிந்த உதவிகளை அடித்தட்டு மக்களுக்குத் தொடர்ந்து செய்து வருகிறேன், அவ்வளவுதான்” எனத் திட்டவட்டமாகக் கூறினார்.
திரையுலகப் பயணம் பற்றி: “தற்போது ஒரு புதிய திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். திரையுலகில் எனது ‘ரீ-என்ட்ரி’ (Re-entry) மிக விரைவில் இருக்கும்” என்று பாலா தெரிவித்தார்.
மாணவர்களின் கல்வி நலனுக்காகப் பிறந்தநாளில் பாலா செய்த இந்த நிதியுதவி மற்றும் நற்செயலை இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

