திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மலைக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காகத் தற்போது வின்ச் மற்றும் ரோப்கார் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, நேரடியாகக் கட்டணச் சீட்டு (டிக்கெட்) பெற்று இந்தச் சேவைகளைப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில், ரோப்கார் மற்றும் வின்ச் சேவைகளுக்கு இணையதளம் (Online) மூலமாக முன்பதிவு செய்யும் புதிய வசதியைக் கோயில் நிர்வாகம் இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்பதிவு செய்யும் முறை மற்றும் கட்டணம்
பக்தர்கள் பழனி கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, தங்களுக்கு உகந்த நேரத்தைத் தேர்வு செய்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்குச் சென்று, மீண்டும் கீழே வருவதற்கு (To and Fro) ஒரு நபருக்கு 100 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு 100 பேருக்கு மட்டுமே அனுமதி!
தற்போது இந்த ஆன்லைன் முன்பதிவு வசதி மூலம் நாளொன்றுக்கு 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது. இதற்கான நேரக் கட்டுப்பாடுகள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளன, காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை: 50 நபர்கள், மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை: 50 நபர்கள், இந்த ஆன்லைன் தட்கல் முறை போன்ற முன்பதிவைப் பயன்படுத்தி, பக்தர்கள் இன்று முதல் தங்களது பயணத்தைத் தொடங்கத் தொடங்கியுள்ளனர்.
6 கால பூஜைகளுக்கும் ஆன்லைன் முன்பதிவு
ரோப்கார் சேவை மட்டுமன்றி, பழனி கோயிலில் தினசரி நடைபெறும் 6 கால பூஜைகளில் பக்தர்கள் கலந்துகொள்வதற்கான ஆன்லைன் முன்பதிவு வசதியும் தற்போது சோதனை முறையில் (Trial basis) தொடங்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு, ஒரு குறிப்பிட்ட கால பூஜைக்கு 5 டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் தங்களின் நேர விரயத்தைத் தவிர்க்கவும், சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யவும் இந்த ஆன்லைன் முன்பதிவு வசதியை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
திருச்செந்தூரில் குவிந்த திருமண ஜோடிகள்…கோவில் வளாகம் முழுவதும் பரபரப்பு…
