விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த புகழ்பெற்ற மயிலம் மலைமேல் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆனி மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும், ஊஞ்சல் உற்சவமும் கோலாகலமாக நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மூலவருக்கு தங்க கவசம் & சிறப்பு அபிஷேகங்கள்
கிருத்திகை விழாவை முன்னிட்டு, அதிகாலை 4:00 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக பொடி, பஞ்சாமிர்தம், பால், சந்தனம், தேன், திருநீறு உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர், மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பச்சை பட்டு உடுத்தி காட்சியளித்த உற்சவர்
அதேபோல், உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும் மஞ்சள், பஞ்சாமிர்தம், தேன், பால், பழங்கள், சந்தனம், விபூதி ஆகியவற்றால் மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. இரவு நேரத்தில் மலர்களால் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, பச்சை பட்டு உடுத்தி வள்ளி மற்றும் தெய்வானையுடன் இணைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு விதமான தீபாராதனைகளும், சோடச உபசார பூஜைகளும் விமரிசையாக நடத்தப்பட்டன.
கோலாகல ஊஞ்சல் உற்சவம்
பூஜைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் உட்பிரகாரத்தை வலம் வந்தார். பின்னர், அங்குள்ள கொலு மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சியளித்த இறைவனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசித்தனர். இந்த ஆனி மாத கிருத்திகை விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும், மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் திருமடத்தினர் மற்றும் கோவில் ஊழியர்கள் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.
பழனி முருகன் கோயில்: ரோப்கார் பயணத்திற்கு இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு வசதி தொடக்கம்!
