“கோட் (GOAT) படத்தில் பிளாக் டிக்கெட் விற்றவர்களெல்லாம் இன்றைக்குச் ‘ஜனநாயகம்’ படம் வந்ததும் மந்திரிகளாகிவிட்டார்கள்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான வார்த்தைகளால் அரசியல் எதிரிகளைச் சாடியுள்ளார். சினிமாப் புகழை மூலதனமாகக் கொண்டு அரசியலுக்கு வருபவர்களையும், தத்துவார்த்தப் பாதையில் பல ஆண்டுகளாகப் போராடி வருபவர்களையும் கடுமையாக ஒப்பிட்டு அவர் பேசியுள்ள கருத்துகள் தற்போது தமிழக அரசியலில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளன.
“நாங்கள் தயாரிக்கப்பட்டவர்கள்… படித்து வளர்ந்தவர்கள்!”
தனது அரசியல் வருகை குறித்தும் கொள்கைப் பயணம் குறித்தும் பேசிய சீமான், “நாங்கள் யாரோ திடீரென வானத்திலிருந்து குதித்தவர்களோ அல்லது சினிமா மேடைகளில் கைக் கோர்த்துவிட்டு அரசியலுக்கு வந்தவர்களோ அல்ல. ஐந்து, ஆறு வயதிலிருந்தே போராட்டக் களத்தில் விரல் பிடித்து அழைத்துச் செல்லப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள். பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் மார்க்ஸ், லெனின், ஏங்கெல்ஸ், பெரியார், அம்பேத்கர், அய்யாவைகுண்டர், புத்தர், அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ் தொடங்கி உலக வரலாறு, பொருளாதாரம், நீர் மேலாண்மை, சூழியல் மற்றும் தமிழ் இலக்கியங்கள் வரை அனைத்தையும் படித்துத் தெளிந்து வந்தவர்கள் நாங்கள். எங்கள் கண்முன்னே எங்கள் இனத்தின் சாவு விழுந்ததைப் பார்த்துக் கதறி, ரத்தச் சதியில் போராடி உருவானவர்கள்” என்று ஆவேசமாக முழங்கினார்.

260 வழக்குகள்: இது தமிழினத்துக்கான தியாகம்!
தன் மீதான வழக்குகளைப் பற்றிப் பேசிய அவர், “என் மீது மொத்தம் 260 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை என்ன சொத்துக் குவிப்பு வழக்குகளா அல்லது கொலை, கொள்ளை வழக்குகளா? இல்லை! என் இனத்தின் உரிமைக்காகவும், மண்ணின் மீட்சிக்காகவும் போராடியதால் என் மீது சுமத்தப்பட்ட வழக்குகளே அவை. சிறைச்சாலை என்பது நமக்குப் புதிதல்ல; வெள்ளைக்காரன் சிறை கட்டியதே மக்களுக்காகப் போராடுபவர்களை அடைக்கத்தான். உரிமைக்காகப் போராடும்போது அடக்குமுறைகளையும் வழக்குகளையும் எதிர்கொள்வதுதான் உண்மையான அரசியலின் இலக்கணம்” என்று குறிப்பிட்டார்.
பாரதியாரின் வரிகளுடன் அதிரடி அறைகூவல்!
மகா கவி பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டித் தொண்டர்களுக்கு எழுச்சியூட்டிய சீமான், “பாதகம் செய்பவரைக் கண்டால் நாம் பயம் கொள்ளல் ஆகாது; மோதி மிதித்துவிடு பாப்பா” என்ற வரியின்படி எத்தகைய அடக்குமுறைகளையும் அதிகார மிரட்டல்களையும் கண்டு அஞ்சாமல், தமிழர்களின் உரிமைக்காகத் தொடர்ந்து போராடுவோம் என்று சூளுரைத்தார். மேலும், சினிமா கவர்ச்சியையும் தற்காலிகக் கைதட்டல்களையும் நம்பி அரசியலுக்கு வருபவர்களையும், தியாகங்களையும் தத்துவங்களையும் அடித்தளமாகக் கொண்டு போராடும் மெய்யான அரசியல்வாதிகளையும் சுட்டிக்காட்டி சீமான் எழுப்பியிருக்கும் இந்தக் கடுமையான விமர்சனங்கள், தற்போதைய தேர்தல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
