சென்னை திருவேற்காடு பகுதியில் தனியாக வசித்து வந்த மாநகராட்சிப் பெண் ஊழியரைத் தலையணையால் அமுக்கிக் கொலை செய்துவிட்டு 8 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வாலிபர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்த ஹேமாவதி என்பவர், திருவேற்காடு அடுத்த அன்னலட்சுமி நகர் பகுதியில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று அவரது வீட்டிற்குள் புகுந்த இரு வாலிபர்கள், ஹேமாவதியை கொடூரமாகத் தாக்கி, தலையணையால் முகத்தை அமுக்கிக் கொலை செய்துள்ளனர். பின்னர் அவர் அணிந்திருந்த 8 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

போலீசாரின் தீவிர நடவடிக்கை:
இக்கொலை சம்பவம் குறித்துத் தகவலறிந்த திருவேற்காடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
ஒருவர் கைது – கூட்டாளிக்கு வலை:
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இக்கொலையில் ஈடுபட்ட நிதிஷ் என்பவரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளி ஆகாஷ் என்பவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
