சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக (DMK) தலைமைச் செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.


கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் கனிமொழி, ஆ.ராசா, அமைப்பு பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் என 800-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அமைப்பு ரீதியான முக்கிய மாற்றங்கள்
‘திமுகவில் மாவட்டச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. மாவட்டச் செயலாளர் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும்’ என்று கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், திமுகவில் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்கிறது.
பதவி இழக்கும் 13 மாவட்டச் செயலாளர்கள்
திமுகவில் தற்போது 70 வயதை கடந்த 13 பேர் மாவட்ட செயலாளர்களாக உள்ளனர். இவர்களின் பதவிக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களின் விவரம்:
காஞ்சிபுரம் தெற்கு: சுந்தர் (72)
ராணிப்பேட்டை: ஆர்.காந்தி (80)
திருவண்ணாமலை தெற்கு: எ.வ.வேலு (75)
விழுப்புரம் வடக்கு: செஞ்சி மஸ்தான் (71)
சேலம் கிழக்கு: எஸ்.ஆர்.சிவலிங்கம் (75)
ஈரோடு தெற்கு: முத்துசாமி (77)
தஞ்சாவூர் வடக்கு: சாக்கோட்டை அன்பழகன் (72)
புதுக்கோட்டை தெற்கு: ரகுபதி (76)
மதுரை மாநகர்: தளபதி (70)
தேனி தெற்கு: ராமகிருஷ்ணன் (77)
விருதுநகர்: கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (77)
தூத்துக்குடி தெற்கு: அனிதா ராதாகிருஷ்ணன் (74)
திருநெல்வேலி மேற்கு: ஆவுடையப்பன் (81)
புதிய வயது வரம்பு மற்றும் பதவிக் காலக் கட்டுப்பாடுகள் காரணமாக இவர்கள் தங்களது பதவிகளை இழக்கின்றனர்.
சட்டசபையில் முன்னாள் அமைச்சர்களின் தகாத வார்த்தைப் பேச்சு: அமைச்சர் ரமேஷ் கடும் கண்டனம்!
