சேலத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த நிதி நிறுவனம் ஒன்று, பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகவும், முதலீட்டிற்கு அதிக வட்டி தருவதாகவும் கூறி சிறு வியாபாரிகள், விவசாயிகள், மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களிடம் ரூ.800 கோடிக்கும் அதிகமாக நிதி மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


400% ரிட்டர்ன்ஸ் என கவர்ச்சி விளம்பரம்
சேலம் மாநகர் அழகாபுரம் பகுதியில் விஜயராகவன் – ராகினி தம்பதியினர், மதுரையைச் சேர்ந்த செண்பகபாண்டி என்பவருடன் இணைந்து “பிராபிட் எவர் டிரேடர்ஸ் (Profit Ever Traders)” மற்றும் “வாராகி வெல்த் அகாடமி” ஆகிய பெயர்களில் நிதி நிறுவனங்களை நடத்தி வந்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ராகினி, நட்சத்திர விடுதிகளில் முதலீட்டாளர்கள் கூட்டங்களை (Investors Meet) நடத்தி, தனது கவர்ச்சிகரமான பேச்சால் பலரையும் கவர்ந்துள்ளார்.
ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ.8,000 வட்டி வழங்கப்படும் என்றும், முதலீடு செய்த பணம் ஓராண்டில் இரட்டிப்பாகும் என்றும் விளம்பரப்படுத்தியுள்ளனர். மேலும், 4 ஆண்டுகளில் 400 சதவீதம் வரை ரிட்டர்ன்ஸ் தரப்படும் என ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பி தொழில் முனைவோர், மருத்துவர்கள், பொறியாளர்கள், விவசாயிகள் மற்றும் முதியவர்கள் எனப் பலதரப்பட்டோர் தலா ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர்.
பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
கடந்த சில மாதங்களாகக் குறிப்பிட்டபடி வட்டித் தொகையையும், அசலையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்ததால் அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள், சேலம் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், ராகினி, விஜயராகவன், செண்பகபாண்டி மற்றும் ஏஜென்ட் அம்சா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில், தலைமறைவாக இருந்த பங்குதாரர் செண்பகபாண்டியை நேற்று மாலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முதன்மை குற்றவாளிகளான ராகினி மற்றும் அவரது கணவர் விஜயராகவன் ஆகிய இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

முதலீட்டாளர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை
“கூடுதல் வட்டி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், முதிய வயதில் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும், விவசாயத்தில் வந்த வருமானத்தையும் முதலீடு செய்து இன்று நடுத்தெருவில் நிற்கிறோம். நட்சத்திர விடுதிகளில் கூட்டங்கள் நடத்தி எங்களை நம்ப வைத்த ராகினி மற்றும் அவரது கணவரை உடனடியாகக் கைது செய்து, எங்களது வாழ்வாதாரப் பணத்தை மீட்டுத் தர வேண்டும்” எனப் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலத்தில் தொடரும் நிதி மோசடிகள்
ஏற்கனவே சேலத்தை மையமாகக் கொண்டு செயல்பட்ட ‘அன்னை தெரசா அறக்கட்டளை’ விஜயாபானு ரூ.500 கோடி மோசடி செய்த வழக்கும், சொர்ணபுரியில் ‘ரீ கிரியேட் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் ரூ.300 கோடி மோசடி செய்த வழக்கும் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையில் இருந்து வருகின்றன. அவற்றைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் ஒரு தம்பதி ரூ.800 கோடி அளவில் பிரம்மாண்ட மோசடியில் ஈடுபட்டிருப்பது சேலம் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதள ஆபாச உள்ளடக்கம்: புகார் அளித்த வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் – டிஜிபி அலுவலகத்தில் மனு!
