முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யாமல், இரண்டாவது திருமணம் செய்துகொண்ட அரசு ஊழியரின் இரண்டாவது மனைவிக்குக் குடும்ப ஓய்வூதியம் பெறச் சட்டப்பூர்வ உரிமையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
மறைந்த அரசு ஊழியர் ஒருவர், தனது முதல் மனைவியை முறைப்படி சட்டப்படி விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவரது மறைவுக்குப் பிறகு, குடும்ப ஓய்வூதியத்தை வழங்கக் கோரி இரண்டாவது மனைவி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தனி நீதிபதி, அந்த இரண்டாவது மனைவிக்குக் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.

தமிழக அரசின் மேல்முறையீடு
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “சட்டப்படி முதல் திருமண பந்தம் அமலில் இருக்கும்போதே செய்யப்படும் இரண்டாவது திருமணம் சட்டப்படி செல்லாது. எனவே, சேவை விதிகளின்படி (Service Rules) இரண்டாவது மனைவிக்கு அரசு ஓய்வூதியம் பெற தகுதி இல்லை” என்று வாதிடப்பட்டது.
உயர் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, தனி நீதிபதி வழங்கிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. தனது தீர்ப்பில், “முதல் மனைவியை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட அரசு ஊழியரின் இரண்டாவது மனைவிக்குக் குடும்ப ஓய்வூதியம் பெற எந்த உரிமையும் இல்லை. அரசு பணிக்கான விதிகள் மற்றும் குடும்ப ஓய்வூதிய சட்டப் பிரிவுகளின்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது நடைபெறும் இரண்டாவது திருமணம் செல்லாத ஒன்றாகும்” எனத் தெளிவுபடுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.
இந்தத் தீர்ப்பு, அரசு ஊழியர்களின் குடும்ப ஓய்வூதிய உரிமைகள் தொடர்பான விவகாரத்தில் மிக முக்கியமான முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது.
