பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை – சேலம் மக்களிடையே அதிர்ச்சி
தமிழ்நாட்டைச் சேர்ந்த சேலம் மாவட்டத்தில் அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உதயசங்கர். இவர் வெள்ளிப் பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார். உதயசங்கர் பாரதிய ஜனதா கட்சியின் மாநகர இளைஞரணிச் செயலாளராகவும் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை பள்ளப்பட்டி 3 ரோடு பகுதியிலுள்ள விவசாய விற்பனை கூட்டுறவு வங்கி அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம கும்பல், உதயசங்கரிடம் தகராறு செய்துள்ளனர். பிரச்சினை அதிகமாகவே அந்தக் கும்பல், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பாஜக பிரமுகரான உதயசங்கரை சரமாரியாக வெட்டத் தொடங்கி யுள்ளார்கள்.
அப்போது உதயசங்கர் அருகிலிருந்த பேக்கரி கடைக்குள் வெட்டுக் காயங்களுடன் ஓடினார். ஆனாலும் அவரை அந்த மர்ம கும்பல் பின் தொடர்ந்து அவரை நடுவீதியில் இழுத்து வந்து சரமாரியாக வெட்டியுள்ளார்கள்.
இதில் உதயசங்கரின் தலை, கை, வயிறு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. பின்னர் உதயசங்கரைத் தாக்கிய அடையாளம் தெரியாத மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த உதயசங்கரை அப்பகுதி மக்கள் மீட்டு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அங்கு உதயசங்கருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் தகவலறிந்து சேலம் மாநகர துணை காவல் ஆணையர் கௌதம் கோயல், உதவி ஆணையாளர் நிலவழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதில் காவல்துறையினர் அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளின் மூலம் ஆய்வு செய்ததில், மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் உதயசங்கரை வெட்டிவிட்டுத் தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மாலை நேரத்தில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.