பணமோசடி வழக்கில் பாஜக மாவட்ட தலைவர் கைது
ஒன்றிய அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த வழக்கில் விருதுநகர் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் வி.கே.சுரேஷ் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே பாஜக மாவட்டச் செயலாளர் கலையரசன் கைது செய்யப்பட்ட நிலையில் மாவட்ட தலைவர் சுரேஷை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசியை சேர்ந்த பாஜக மாவட்ட நிர்வாகியான பாண்டியன் என்பவரது மகனுக்கு ஒன்றிய அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி என புகார் எழுந்துள்ளது. துறைமுகம் அல்லது ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக 2017 ஆம் ஆண்டில் சுரேஷ், கலையரசன் சேர்ந்து பாண்டியனிடம் ரூ.11 லட்சம் பெற்றுள்ளார். உறுதியளித்தபடி வேலை வாங்கித் தராததால் பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட பாண்டியனுக்கு ரூ.2 லட்சம் மட்டும் கொடுத்துள்ளார். எஞ்சிய ரூ.9 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றிவந்ததால் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் பாணியன் புகார் அளித்தார்.

பாண்டியனின் புகாரை விசாரித்த குற்றப்பிரிவு போலீஸ் கடந்த டிசம்பர் மாதம் கலையரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாஜக மாவட்ட தலைவரான சுரேஷ்க்கு நிபந்தனையுடன் உயர்நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கி இருந்தது. முன் ஜாமின் நிபந்தனைபடி, பணத்தை திருப்பி கொடுக்காமல் சுரேஷ் ஏமாற்றியதை அடுத்து அவரை கைது செய்ய போலீஸ் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, திருத்தங்கலில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது சுரேஷை விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.


