புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம் தொடர்ந்த வழக்கில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கட்டப்பஞ்சாயத்து மற்றும் சாதிய வன்கொடுமை
புதுக்கோட்டை மாவட்டம், கோலேந்திரம் பகுதியைச் சேர்ந்த செல்வா என்பவர் ஊர் திருவிழா தொடர்பான கூட்டத்தில் ஊர் பெரியவர்களை எதிர்த்துக் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கட்டப்பஞ்சாயத்து கும்பல், செல்வாவையும் அவரது தாயாரையும் ஊரார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைக்கும் சாதிய வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளது.

அபராதத் தொகையும் ஊர் நீக்கமும்
காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கு விதிக்கப்பட்ட ரூ. 30,000 அபராதத் தொகையை ரூ. 10,000-ஆகக் குறைத்து செலுத்தக் கட்டப்பஞ்சாயத்தினர் உத்தரவிட்டனர். இருப்பினும், வறுமை காரணமாக அந்த அபராதத் தொகையைச் செலுத்த செல்வா குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். பணத்தைச் செலுத்தாததால் ஆத்திரமடைந்த அக்கும்பல், செல்வாவின் குடும்பத்தையும் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த 25 குடும்பங்களையும் சட்டவிரோதமாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளது.
நீதிமன்ற நடவடிக்கை
தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி செல்வா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உரிய ஆய்வு செய்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது. சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பஞ்சாயத்து நடத்தி குடும்பங்களை ஒதுக்கி வைத்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
