செங்கோல் விவகாரத்தில் புனை கதைகள்- ப.சிதம்பரம்
டெல்லியில் நீதிகேட்டு போராடும் மல்யுத்த வீரர்கள் மீது காவல்துறை நடந்து கொண்ட விதம் கண்டனத்துக்குரியது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், “டெல்லியில் நீதிகேட்டு போராடும் மல்யுத்த வீரர்கள் மீது காவல்துறை நடந்து கொண்ட விதம் கண்டனத்துக்குரியது. காவல்துறையினர் மல்யுத்த வீரர்களை போல செயல்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் போராட உரிமை உள்ளது. மல்யுத்த வீரர்களை ஒன்றிய அமைச்சரோ, அதிகாரிகளோ யாரும் சென்று சந்திக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள செங்கோல் பற்றி புனை கதைகள் அதிகமாக வருகிறது. செங்கோல் பற்றி நேற்று கூட ஆளுநர் ஒரு துணைக் கதையை கூறியுள்ளார். நேரு மற்றும் ராஜாஜியின் வரலாற்றை இரு வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். 1947 ஆகஸ்ட் 14-ம் தேதி மவுண்ட் பேட்டன் பிரபு டெல்லியில் இல்லை, பாகிஸ்தானில் இருந்தார் என்பது வரலாறு ஆசிரியர்களின் கூற்று. வரலாற்று ஆசிரியர்கள் கூறுவது மட்டுமே உண்மையான வரலாறு, மற்றவை எல்லாம் புனையப்படுவது. துணைக் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.
2024 மக்களவை தேர்தலில், பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர்ந்தால், 450 தொகுதிகளில் பொதுவான பிரதமர் வேட்பாளரை முன் நிறுத்தி களம் காணலாம். இது ஒரு விருப்பம்தான்” எனக் கூறினார்.