சென்னை: சாலையில் 10 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம்- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சென்னை தியாகராய நகரில் உள்ள பஜார் டாக்டர் நாயர் சாலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதை சீரமைக்கும் பணிகளில் குடிநீர்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை தி.நகரில் உள்ள நாயர் சாலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் அளவில் 10 அடி ஆழம், 3 அடி அகலத்தில் பெரிய பெள்ளம் ஏற்பட்டது. இது தொடர்பான தகவல் அறிந்த போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து சென்னை குடிநீர் வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். மேலும் அந்த சாலையை ஒரு வழி சாலையாக மாற்றி இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மட்டுமே அனுமதித்தனர். குறிப்பாக சாலையில் வழக்கமாக சென்று வரும் தடம் எண் 12x மற்றும் 11 உள்ளிட்ட பேருந்துகளை வடக்கு போக் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது.

இதனை தொடர்ந்து குடிநீர் வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளத்தை முழுமையாக தோண்டி ஆய்வு செய்த பிறகு தான் எதனால் பள்ளம் ஏற்பட்டது என்ற காரணம் தெளிவாக தெரிய வரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கழிவுநீர் குழாய் அல்லது குடிநீர் குழாய் போன்றவைகளை சாலையின் கீழ் செல்வதால் எதனால் இந்த பள்ளம் ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்து பள்ளத்தை சீர் செய்யும் பணி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.