மக்கள் திலகம் என அனைவராலும் கொண்டாடப்படும் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களை பற்றி கூற இந்த ஒரு கட்டுரை போதாது என்றாலும், அவரைப் பற்றி சில நினைவலைகளை பார்ப்போம்.
கேரளாவின் மலபார் பகுதியில் பிறந்து, இரண்டு வயதிலேயே தன் தந்தையை இழந்து, இலங்கைக்கு குடியேறி அங்கும் வறுமையில் இருந்து விடுபட முடியாமல் கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்து, மேடை நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து தமிழ்நாட்டின் மன்னனாக மாறியவர் புரட்சித் தலைவர், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்.
சினிமா ஆசையால் மெட்ராஸின் ஒவ்வொரு தெருக்களிலும் அலைந்து திரிந்து தனக்கான இடத்தை தேடிப் பிடித்து “வீர ஜெகதீஷ்” படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து நடித்த ஒரு சில படங்கள் பெரிதளவு கவனம் ஈர்க்கவில்லை. அந்த நேரத்தில் தான் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்து வெளியான “குலேபகாவலி” மக்கள் கூட்டத்தை இவர் பக்கம் இழுத்தது. அதைத்தொடர்ந்து பொன்மனச் செம்மலுக்கு தொட்டதெல்லாம் ஜெயம் தான். சினிமாவில் தான் சம்பாதித்த சொத்துக்களை விட நாட்டு மக்களை மிகப்பெரிய சொத்தாக நேசித்து வாரி வழங்கும் வள்ளலாக வாழ்ந்தார். இன்றும் பல பெரிய நடிகர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகி விட வேண்டும் என்று விரும்புவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.
இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டவர் தான் எம்.ஜி.ஆர். சினிமாவை வெகுஜன மக்களைச் சென்றடையும் ஊடகமாகப் பயன்படுத்தி பல நல்ல கருத்துக்களைப் பொது மக்களுக்கு எடுத்துக் கூறி “வாத்தியார்” ஆனார். கட்சி நிர்வாகி, பல்லாவரம் தொகுதியின் எம்எல்ஏ, என உயர்ந்து தனக்கென தனி கட்சியை உருவாக்கி 1977 பொதுத்தேர்தலில் வெற்றி வாகை சூடி தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.
“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்… இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” எனும் வரிகளுக்கு இன்றளவும் இலக்கணமாய்த் திகழ்ந்து தன்னுடைய 70 வது வயதில் மண்ணை விட்டு நீங்கினாலும் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து நிற்கும் ஒரு சகாப்தம் எம்.ஜி.ஆர். அவருக்கு இன்று 107 வது பிறந்தநாள். புரட்சித் தலைவரை மனம் மகிழ்ந்து வணங்கி போற்றுவோம்.