நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மகளிர் உரிமை தொகையை உயர்த்த திமுக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை அனைத்து அரசியல் கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தரவையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளன. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தடுத்து மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்டவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மகளிர் உரிமை தொகையை உயர்த்த திமுக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் மகளிர் உரிமை தொகை உயர்த்துவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், அது ரூ.1500 உயர்த்தப்படும் என திமுக தேர்தல் வாக்குறுத்ஹி வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலில் மகளிர் உரிமை தொகை அறிவிப்பு, திமுக வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதேபோன்று நாடாளுமன்ற தேர்தலிலும் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட திமுக முடிவு செய்துள்ளது.