
பெண்களின் வளர்ச்சியே சமூகத்தின் வளர்ச்சி என்பதை கருத்தில் கொண்டு காலத்திற்கேற்ப இன்னும் பல திட்டங்களை திமுக அரசு நிச்சயம் செய்து கொடுக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது: கழக அரசு அமைகிற போதெல்லாம் மகளிரின் மேன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும், ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 787 மகளிர் மற்றும் திருநங்கையர்களுக்கு ரூ. 5.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினோம்.
மேலும் , புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை பெறுகிற மாணவிகளுக்கு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துக் கடிதங்களை ஒப்படைத்தோம். பெண்களின் வளர்ச்சியே சமூகத்தின் வளர்ச்சி என்பதை கருத்தில் கொண்டு காலத்திற்கேற்ப இன்னும் பல திட்டங்களை நம் கழக அரசு நிச்சயம் செய்து கொடுக்கும் என உரையாற்றினோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


