நடிகர் ஆரி அர்ஜுனன் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆரி அர்ஜுனன் தமிழ் சினிமாவில் 2010 வெளியான ரெட்டச்சுழி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து வெளியான நெடுஞ்சாலை படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார் ஆரி அர்ஜுனன். மேலும் மாயா, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சேரன் இயக்கத்தில் வெளியான ஜர்னி என்ற வெப் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ஆரி அர்ஜுனன், அறிமுக இயக்குனர் ராஜசேகர பாண்டியன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து இந்த படத்தில் பிளாக் பாண்டி, வையாபுரி, தன்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மெட்ராஸ் டெக் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு மதுரை பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களும் இந்த படத்தில் இடம் பெற இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை லட்சுமி மேனன் சில மாதங்களுக்கு முன்பு வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.