90ஸ் கிட்ஸ்க்கு உலக தரத்திலான கதைகளை கலை வடிவமாக படைத்தவர் இயக்குனர் செல்வராகவன். இன்று 2கே கிட்ஸ் வரையிலும் இவருடைய படைப்புகள் மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளன. 90 கால கட்டங்களில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் கஸ்தூரிராஜா. அவருடைய மூத்த மகன் செல்வராகவன். நடிகர் தனுஷின் அண்ணன் இவர் என்பது அனைவரும் அறிந்ததே.
சினிமா பின்புலத்திலிருந்து தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த செல்வராகவன் புதுமையான படைப்புகளையே கொடுக்க வேண்டும் என்பதில் முனைப்போடு இருந்துள்ளார். அந்த வகையில் தம்பி தனுஷை கதாநாயகனாக அறிமுகம் செய்து ‘துள்ளுவதோ இளமை’ படத்தை இயக்கியிருந்தார். இளைஞர்களுக்கு இப்படம் மிகவும் பிடித்துப் போக முதல் படமே வெற்றிப் படமாக அமைந்தது.
அதைத் தொடர்ந்து தான் யார் என்பதை நிரூபிக்க வேறு ஒரு அவதாரத்தை எடுத்தார் செல்வராகவன். மீண்டும் தனுஷை கதாநாயகனாக வைத்து காதல் கொண்டேன் திரைப்படத்தை இயக்கினார். பிரபலம் இல்லாத இயக்குனர், நடிகர், நடிகையர் என வெளியான இப்படம் உலக தரத்திலான படமாக அமைந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.பின்னர் இவர் இயக்கிய செவன் ஜி ரெயின்போ காலனி திரைப்படமும் வித்தியாசமான காதல் கதையாக அமைந்து இளைஞர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு மீண்டும் செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் உருவான திரைப்படம் புதுப்பேட்டை. வசூல் ரீதியில் இப்படம் வெற்றி படமாக அமையாத போதிலும் இன்றுவரை ஒரு தரமான கேங்ஸ்டர் படமாக பார்க்கப்படுகிறது. 2கே கிட்ஸ்கள் ரிப்பீட் மோடில் இப்படத்தை கண்டு களிக்கின்றனர். மேலும் புதுப்பேட்டை 2 படத்திற்காகவும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அடுத்ததாக கார்த்தியை வைத்து இவர் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் இன்றும் பல ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளது. இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத மாறுபட்ட பேண்டஸி படமாக இதனை கொடுத்திருந்தார் செல்வராகவன். தொடர்ந்து தனுஷ் நடிப்பில் இவர் இயக்கிய மயக்கம் என்ன திரைப்படம் பல இளைஞர்களின் இதயத்துக்கு மிக நெருக்கமான படமாக அமைந்து விட்டது. பின்பு யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல சில படங்கள் தோல்வி படங்களாகவும் அமைந்தன. இவருடைய படங்கள் வணிக ரீதியில் பெரிதும் ஈர்க்கப்படவில்லை என்றாலும் காலத்தால் அழியாத கலையாக நிலைத்து நிற்கும் அளவிற்கு தரமாக அமைந்திருக்கும். சினிமாவில் காதலுக்கு புதிய இலக்கணத்தை எழுதிய பெருமையும் இவரைச் சேரும். இவருடைய படத்தின் பாடல்கள் காதலின் மேலுணர்வை செவி வழியே மனதுக்கு கடத்தும் ஆற்றல் படைத்தவை. மேலும் நடிப்பதிலும் ஆர்வம் உடைய செல்வராகவன் தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சினிமாவை நேசித்து சினிமாவுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மகா கலைஞன் செல்வராகவனின் 47 வது பிறந்தநாள் இன்று. திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் செல்வராக விளக்கு வாழ்த்து தெரிவிக்கும் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் செல்வராகவனுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நாமும் நம் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்வோம்.