தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் உட்பட இருவருக்கு இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கடந்த மாதம் 26 ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பாஜக நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஊழியர்கள் நவீன், பெருமாள், சதீஷ் ஆகிய மூன்று பேரும் நேற்று முன்தினம் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி அவர்களிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், முருகனிடம் பணியாற்றும் ஆசைத்தம்பி இரண்டு பேருக்கு சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். இன்று 11 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு அனுப்பிய சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முருகனிடம் பணியாற்றும் ஜெய்சங்கர் என்பவரையும் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கிய வேலை காரணமாக அவர், ஆஜராக கால அவகாசம் கேட்டுள்ளார்.