பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு, பழிவாங்க முற்படுவதா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மும்பை மற்றும் டெல்லியிலுள்ள பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது அப்பட்டமான அதிகார முறைகேடாகும். குஜராத்தில் மோடி அரசு நிகழ்த்திய இனப்படுகொலை குறித்தான ஆவணப்படத்தை வெளியிட்டதற்கு எதிர்வினையாகப் பழிவாங்கும் போக்கோடு நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்நடவடிக்கை என்பது பத்திரிக்கைச்சுதந்திரத்திற்கு விடப்பட்டிருக்கும் வெளிப்படையான மிரட்டலாகும். உலகப்புகழ் பெற்ற ஊடகமான பி.பி.சி.யின் ஆவணப்படத்தை நேர்மையாக எதிர்கொள்ள திராணியற்று, எதேச்சதிகாரப்போக்கோடு அவற்றிற்குத் தடைவிதித்த ஒன்றிய அரசு, தற்போது அதன் நீட்சியாக வருமானவரித்துறையினரை ஏவிவிட்டு, தனது அதிகாரப்பலத்தைக் காண்பிக்க முற்படுவது வெட்கக்கேடானது.
பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு, பழிவாங்க முற்படுவதா?https://t.co/649Yd1wdDs pic.twitter.com/YlEOC0xnYz
— சீமான் (@SeemanOfficial) February 15, 2023
வருமானவரித்துறை, மத்தியப் புலனாய்வுத்துறை, மத்திய அமலாக்கத்துறை என தன்னாட்சி அமைப்புகள் யாவற்றையும் கையகப்படுத்தி, அதன்மூலம் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களையும், சனநாயகவாதிகளையும், சமூகச்செயற்பாட்டாளர்களையும், மண்ணுரிமைப் போராளிகளையும், நேர்மையான ஊடகங்களையும் அச்சுறுத்தி வரும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோல் நடவடிக்கைகளுக்கு எனது வன்மையான கண்டனத்தையும், எதிர்ப்புணர்வையும் பதிவுசெய்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


