அதிமுக யூகத்தின் அடிப்படையிலேயே இடைத்தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா மரணமடைந்ததை அடுத்து, அத்தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இத்தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில், தொகுதியின் வாக்காளர் பட்டியலை சரி பார்த்த போது, அதில் இடம்பெற்றிருந்த பலர் தொகுதியில் இல்லை என்பதும், இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை என்பதும், பல வாக்காளர்களின் பெயர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளதும் தெரியவந்ததாகக் கூறியுள்ளார்.
தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையான 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்களில், 7 ஆயிரத்து 947 இறந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்றும், 30 ஆயிரத்து 56 வாக்காளர்கள் தொகுதியில் வசிக்கவில்லை என்றும் இவர்கள் கள்ள ஓட்டு போட பயன்படுத்தக் கூடும் என மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், ஆளுங்கட்சியில் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் ஒருவர், பணபட்டுவாடா பற்றி நிர்வாகிகளிடம் பேசியுள்ளார் எனவும், 2021ம் ஆண்டு தேர்தலில் வாக்கு வித்தியாசம் என்பது 8 ஆயிரத்து 500 வாக்குகள் தான் எனவும், தற்போது இறந்தவர்கள், தொகுதியில் இல்லாதவர்கள் என 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலில் நீடிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அதனால் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தக் கோரியும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவர் என்பதால் மத்திய படைகளை தேர்தல் பணிக்கு ஈடுபடுத்த கோரி தேர்தல் ஆணையத்துக்கு பல தேதிகளில் மனு அளித்திருந்ததாகக் கூறியுள்ளார். இந்த மனுக்களை பரிசீலிக்கவும், தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், பூத் லிப் அடிப்படையில் அல்லாமல், வாக்காளர் அடையாள அட்டை அடிப்படையில் வாக்காளர்களை சரிபார்த்து வாக்களிக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி.சண்முகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாரயண் ஆஜராகி வாதிட்டார். ஏற்கனவே தேர்தல் ஆணையம் தரப்பில் வாக்காளர்களை அடையாளம் காண ஆவணங்கள் பட்டியல் தரப்பட்டுள்ளது.தேர்தல் அதிகாரிகள் வீடு வீடாக சென்று பூத் சிலிப் கொடுக்கும்போது, யாரவது இறந்திருந்தால் , எதிர்ப்பு இருந்தால் பூத் சிலிப் தரமாட்டார்கள் அதற்கென தனி பட்டியல் தயார் செய்யப்படும் என தெரிவித்தார்.
பாதுகாப்பு பணிக்காக 409 சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோல பறக்கும்படை அமைக்கப்பட்டு நியாயமான நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்படும் என குறிப்பிட்டார்.சிசிடிவி பதிவு,வெப் டெலிகாஸ்ட் பதிவுகள் செய்யப்படும் என்றும், ஏற்கனவே உள்ள நிலையான தேர்தல் நடைமுறைகள் பின்பற்றப்படும் என உறுதி அளித்தார். தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் வழக்கை திங்கட்கிழமை ஒத்திவைத்தனர்.


