தபால் வாக்குகள் கடைசியில் எண்ணப்படும் – தலைமை தேர்தல் அதிகாரி
அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தபால் வாக்கு எண்ணிக்கையும் சேர்த்து முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு செய்தியாளர்களுக்கு தகவல் அளித்தார்.
அப்போது பேசிய அவர், வாக்கு எண்ணிக்கைக்காக பார்வையாளர்கள் அனைவரும் வருகை தந்துள்ளனர். வாக்கு எண்ணிக்கைக்கு தயாராக உள்ளோம். இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். சுற்று வாரியாக வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்படும்.
தபால் வாக்குகள் சரியாக 8 மணியளவில் எண்ண தொடங்கப்படும். தபால் வாக்கு எண்ணிக்கை குறித்த விபரங்கள் அங்குள்ள அரசியல் கட்சி முகவர்களுக்கு அறிவிக்கப்படும். மேலும் அங்குள்ள கரும்பலகையில் எண்ணிக்கை விவரங்கள் எழுதி வைக்கப்படும். ஆனால் அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தபால் வாக்கு எண்ணிக்கையும் சேர்த்து முடிவுகள் அறிவிக்கப்படும்.
தபால் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கினாலும், 8:30மணிக்குள் தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்துவிட்டால் மின்னணு வாக்கு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ண தொடங்கப்படும்.
ஒருவேளை தபால் வாக்கு எண்ணிக்கை 8 மணி அளவில் தொடங்கி 8:30 மணிக்கு தாண்டி சென்றாலும், 8:30 மணியளவில் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குப்பதிவு எண்ணத் தொடங்கப்படும்.
வாக்கு எண்ணிக்கை தொடர்பான புகார்களை பெற தலைமைச் செயலகத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் பார்வையாளர் கையொப்பமிட்ட பிறகு அதிகாரப்பூர்வமாக எண்ணிக்கை அறிவிக்கப்படும்.
வாக்கு எண்ணிக்கையின் போது எதாவது 5 ஒப்புகை சீட்டு இயந்திரம் தேர்வு செய்யப்பட்டு அவற்றில் பதிவான வாக்குகளும் எண்ணி சரிபார்க்கப்படும். வாக்குகள் மீண்டும் எண்ணப்பட வேண்டும் என புகார் தெரிவிக்கும் பட்சத்தில் அதுக்குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவெடுப்பார்.
3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குகளை எண்ண அதிக மேஜைகள் போடப்பட்டுள்ளது. அதன்படி, சோழிங்கநல்லூர் 30, கவுண்டம்பாளையம் 20, பல்லடம் 18 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து இடங்களிலும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தொகுதியில் 15க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடும் பட்சத்தில் அந்த தொகுதிக்கான மின்னணு வாக்கு இயந்திரங்களின் எண்ணிக்கை ஒன்றிற்கும் மேற்பட்டிருப்பதால் ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கைக்கும் நேரம் அதிகமாகும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6 ஆம் தேதியுடன் முடிவுபெறும். மறுவாக்கு எண்ணிக்கை செய்ய வேண்டும் என்ற பட்சத்தில் அந்த இரண்டு நாட்களில் நடைபெறும்.