அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அதிமுக அலுவலகத்தில் உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


தொடர்ந்து பேசிய அதிமுக எம்.பி தம்பிதுரை, “அதிமுகவுக்கு இரட்டை தலைமை சரிவராது. ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என ஆரம்பம் முதலே சொல்லி வந்தேன். அது தான் இன்று நடந்துள்ளது. ஜெயலலிதாவின் ஆட்சியை அவர் மறைந்த பிறகு சிறப்பாக நடத்தி காட்டியவர் எடப்பாடி பழனிசாமி. கட்சியின் செயல்பாடுகள் குறித்து எல்லாரையும் கலந்து பேசி தான் முடிவெடுத்து தான் நடவடிக்கை எடுப்பேன்” என தெரிவித்தார்.
அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “பொது செயலாளர் தேர்தல் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து உரிய நேரத்தில் நடத்தப்படும். ஓ.பி.எஸ் எத்தனை மேல் முறையீடு செய்தாலும் வெற்றி எங்களுக்கே என்றார். ஓ.பி.எஸ் மற்றும் ஒரு சிலரை தவிர எம்எல்ஏக்கள் உட்பட யார் எங்கள் பக்கம் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். ஜெயக்குமார், ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் மக்களவை எம்.பி யாக இருந்தாலும் அவருக்கும் அதிமுகவுக்கும் இனி தொடர்பில்லை. இதுகுறித்து மக்களவைக்கு கட்சி சார்பில் தெரிவிப்போம். மற்ற முடிவுகளை மக்களவை சபாநாயகர் எடுப்பார்” என தெரிவித்தார்.
