கேரள இலக்கியத் திருவிழாவில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க்க உள்ளார்!
`நான் கண்டறிந்த அரசியல்’ (Finding my politics) என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்!

கேரள மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில், டி.சி. கிழக்கம்முறி அறக்கட்டளை சார்பில் ஜனவரி 12-ம் தேதி முதல் ஜனவரி 15-ம் தேதி வரை 4 நாட்களுக்கு மாபெரும் இலக்கியத் திருவிழா நடைபெறுகிறது.

ஆசியாவின் இரண்டாவது பெரிய இலக்கியத் திருவிழாவாகக் கருதப்படும் இந்நிகழ்ச்சியில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற இலக்கிய ஆளுமைகள், எழுத்தாளர்கள், பொருளியல் நிபுணர்கள், தொழில்முனைவோர், அரசியல்வாதிகள், கலைத் துறையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுப் பேசு உள்ளனர்.
இதில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர் என கலைத் துறையிலும், அரசியல் துறையிலும் பங்காற்றிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் பங்கேற்கிறார்.

அவர் வரும் 15-ம் தேதி மாலை 4 மணியளவில் `நான் கண்டறிந்த அரசியல்’ (Finding my politics) என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறார். இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க நிகழ்வான, மிகப் பெரிய இலக்கியத் திருவிழாவில் கமல் ஹாசன் அவர்கள் பங்கேற்பது தமிழர்களுக்குப் பெருமையளிக்கும் ஒன்றாகும்.
இந்தியாவின் ஒரு சிறந்த கலை ஆளுமையாகவும், அரசியல் கட்சித் தலைவராகவும் இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று, உரை நிகழ்த்துவார் என்று விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஏற்கெனவே, தான் தொகுத்து வழங்கும் `பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், மலையாளத்தின் பிரபல எழுத்தாளுமைகளையும், அவர்களது படைப்புகளையும் கமல் ஹாசன் அறிமுகப்படுத்தியுள்ளார்.

கேரள மாநிலத்தின் பாரம்பரியக் கலைகள், இலக்கியம், திரைத்துறை ஆகியவற்றின் மீது ஆர்வம்கொண்ட கமல் ஹாசன் அவர்கள் கேரளாவின் இலக்கிய ஆளுமைகளான பால் ஜக்காரியா, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு உள்ளிட்ட பல முன்னணி எழுத்தாளர்களோடு நீண்டகால நட்பு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


