தமிழகத்தில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. பல்வேறு அமைச்சர்களுக்கு இலாக்கக்கள் மாற்றியும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி ஏற்றார். புதிய அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் காமராஜர் சாலையில் இருக்கக்கூடிய பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின்,தன் மீது தொடர்ந்து விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும் அதை பொருட்படுத்தாமல் செயல்படுவேன் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டிற்கு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்ட தான் செய்வார்கள் எனவும் அவர் கூறினார். தொடர்ந்து தலைமை செயலகத்தில் தனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கோப்புகளில் கையெழுத்திட்டார்.
இதனிடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் முதலமைச்சர் அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.