spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஆவடி மக்களின் அடிப்படை தேவை - 5

ஆவடி மக்களின் அடிப்படை தேவை – 5

-

- Advertisement -

ஆவடி மக்களின் அடிப்படை தேவை-5

“ஆவடி மக்களின் எழுச்சி” என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையை ஏராளமானோர் படித்து பாராட்டி வருகின்றனர். அடுத்தது என்ன சார் செய்ய வேண்டும் என்று ஆர்வமுடன் கேட்டு வாட்ஸப்பில் தகவல் தெரிவித்து வருகின்றனர். இன்னும் நிறைய பேர் அவரவர் பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை பேசி வருகின்றனர். அனைவருக்கும் மனமார்ந்த நன்றி- ஆசிரியர்.

we-r-hiring

ஆவடியில் ஏராளமான பிரச்சனைகள் இருக்கிறது. மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கி ஒவ்வொரு நகர்களிலும் பிரச்சனைகள் நிறைந்து இருக்கிறது.

ஒவ்வொரு பகுதிகளிலும், தெருக்களிலும் பிரச்சனை இருக்கிறது. இந்த பிரச்சனைகளை நாம் எப்படி அணுக வேண்டும் ? எப்படி தீர்க்கப் போகிறோம் ? இதுதான் முதன்மையான கேள்வி. நம்முடைய மாநகரில் இருக்கும் பிரச்சனை மற்ற ஊர்களில் இல்லையா ? அனைத்து நகர்களிலும், மாநகர்களிலும் இருக்கிறது. ஆனால் ஆவடியில் இருப்பதைப் போல் இல்லை. ஆவடியில் இருக்கும் பிரச்சனைகள் பழையது, நீண்ட காலமாக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் உருவாக்கப்பட்டவை.

Avadi Corporation

சிலர் அரசியல் பிரமுகர்களிடமும், கவுன்சிலர்களிடமும் பிரச்சனையை கொண்டு செல்கிறார்கள். அரசியல் வாதிகளும், கவுன்சிலர்களும் செய்வதறியாமல் தவிக்கிறார்கள். “மண்டல தலைவர்கள்” , அதிகாரிகள், ஆணையர் என்று எல்லோரும் என்ன செய்வதென்று தெரியாமல் மனதுக்குள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆவடியில் உள்ள ஒவ்வொரு பிரச்சனையும் தீர்க்க வழி தெரியாமல் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் திணறுகிறார்கள். தமிழ்நாட்டிலேயே இந்த ஊரைப் போன்ற சூழல் வேறு எங்கேயும் இல்லை என்று அதிகாரிகளே வேதனைப்படுகிறார்கள். மாநகர ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள், பொறுப்பில் உள்ளவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கும் பிரச்சனை இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பிரச்சனைகளுக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் பிரச்சனைகளின் ஆழத்தை புரிந்து கொள்ள முடியும். இந்த பிரசச்சனைகளை உருவாக்கியவர்கள் யார் ? என் தெருவில் உள்ள குப்பையை அருகில் உள்ள பள்ளி காம்பவுண்டிற்குள் தூக்கி வீசுவது யார் ? பக்கத்து தெருவில் தூக்கி போட்டது யார் ? நமது தெருவில் உள்ள கழிவு நீரை, மழை நீரை வெட்டி பக்கத்து தெருவில் தேங்க வைப்பது யார் ? ஒவ்வொரு பிரச்சனைக்கும் காரணம் நான் இல்லை என்று தப்பித்து ஓடுவது யார் ?

பட்டாபிராமில் ஒரு பிரச்சனை; அந்த பகுதியில் நான்கு பேருக்கு வாந்தி பேதி என்றால் திருமுல்லைவாயல், ஆவடி, கோயில்பதாகையை சேர்ந்தவர்கள் அமைதி காப்பது ஏன் ? பக்கத்து வீட்டில் பிரச்சனை என்றால் ஒதுங்கி செல்வது யார் ? ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கும் அடிப்படை காரணம் யாரோ அந்த நபரை நேருக்கு நேராக சந்தித்து கேட்டுவிட வேண்டும். அப்பொழுதுதான் ஒட்டு மொத்த பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். பிரச்சனைகளுக்கு காரணமானவர் யாரோ ? பிரச்சனைகளை உருவாக்கியவர்கள் யாரோ அவரை சந்தித்து பேசினால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.

பாதாள சாக்கடை திட்டம்

ஆவடி மாநகரில் உள்ள அடிப்படை பிரச்சனைகளுக்கு காரணம் ஆவடியில் வசிக்கின்ற மக்களாகிய நாமாகத்தான் இருக்க முடியும் என்பது என் தாழ்மையான கருத்து. ஆவடி மக்களின் பிரச்சனைகளுக்கு திருவள்ளூர் மக்களோ, காஞ்சிபுரம் மக்களோ காரணமாக இருக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆவடி மாநகரில் உள்ள பிரச்சனைகளுக்கு இந்த பகுதியில் வாழும் மக்களாகிய நானும், நீங்களும் தான் காரணம் என்பது அடிப்படையான உண்மை. நீங்களும், நானும், நமது பக்கத்து வீட்டுகாரரும், பக்கத்து தெருவில் உள்ளவரும் சேர்ந்ததுதான் ஆவடி. அவர்களுக்கும் எனக்கும் உள்ள உறவுதான், எனக்கும் மற்றவர்களுக்கும் உள்ள உறவுதான் ஆவடி, அதைதான் சமுதாயம் என்கிறோம். ஆவடி என்பது வேறு யாருக்கோ சொந்தம் என்றும், அதற்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ஒதுங்கி நிற்பது, “அதோ, போகிறாளே அவள் என் மனைவிதான், ஆனால் அவளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை ” என்று ஒதுங்கி நிற்பதற்கு சமம்.

ஆகவே, நீங்களும் நானும் தான் ஆவடி, நீங்களும் நானும் தான் பிரச்சனை. நம்மில் இருந்து உருவானது தான் ஆவடி. ஆகாயத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதல்ல. அதனால் ஆவடியில் உள்ள பிரச்சனைகளை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நம்மை நாமே புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய பிரச்சனைகள் தான் ஆவடியின் பிரச்சனை. கோயில்பதாகையில் ஒரு பிரச்சனை என்றால் அது என் பிரச்சனை அல்ல என்று ஒதுங்கி செல்வதில் “தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலரைப் போல்” மோசமான மனநிலையில் இருக்கிறோம். அவர்கள் தான் அது என் வார்டு அல்ல, அதற்கும் எனக்கும் சம்மதம் இல்லை என்று பிரச்சனையை கண்டு ஒதுங்கி ஓடுவார்கள். நாம் சாதாரண மக்கள். நாம் எங்கேயும் ஒதுங்கி ஓடி ஒளிய முடியாது. நமது பிரச்சனையை நாம் தான் சந்திக்க வேண்டும். நாம் கவுன்சிலர்கள் இல்லை, மண்டல தலைவர்கள் அல்ல, பிரச்சனை என்றால் தட்டி கழிப்பதற்கோ, கடந்த ஆட்சியாளர்களின் மீது பழியை போடுவதற்கு நாம் மக்கள் பிரதநிதிகள் அல்ல. அவர்களுக்கு எப்போதும் பிரச்சனைகள் தேவை. பிரச்சனைகள் தீர்ந்துவிட்டால் அடுத்த முறை எந்த காரணத்தை காட்டி வாக்கு கேட்பார்கள்.

அரசியல் வாதிகளை பொருத்தவரை ஊரில் பிரச்சனை நீடித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி நீடிக்க விடப்பட்ட பிரச்சனை தான், ஆவடி பாதாள சாக்கடை திட்டமும், குடிநீர் திட்டமும். இதுபோன்ற நூறுக்கும் அதிகமான பிரச்சனைகள் ஆவடி முழுவதும் இருக்கிறது. அரசியல் வாதிகளும், ஆட்சியாளர்களும் நினைத்திருந்தால் ஆவடி ஒரு சிங்கப்பூராக மாறியிருக்கும். அவர்களின் நோக்கம் ஆவடியை சிங்கப்பூராக மாற்றுவது இல்லை. அவர்களின் நோக்கம் அடுத்த தேர்தலில் “பாதாள சாக்கடை திட்டத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முடித்து தருவோம் என்று வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்பது தான். அதற்கு அந்த பிரச்சனை அப்படியே இருந்தாக வேண்டும். ஆனால் எத்தனை தேர்தல் வந்தாலும் அவர்களால் அதை தீர்க்க முடியாது. 25 சதவீதம் திட்டம் முடிக்கவே 16 வருடம் ஆனது என்றால் 100 சதவீதம் நிறைவடைய எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை கணக்கு போட்டு பாருங்கள். அவர்களால் பிரச்சனையை முடிக்க முடியாது, முடிக்கவும் மாட்டார்கள். அதுபோன்ற ஆட்களை தான் நாம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம்.. நமது மனநிலையும் அப்படித்தான் இருக்கிறது.

ஆவடி

உங்களுக்கு தெரிந்த கதையை சொல்கிறேன்.

வீட்டிற்கு வந்த மாப்பிள்ளைக்கு பல் முழுவதும் கறை படிந்து , பழுப்பு நிறத்தில் பார்ப்பதற்கே அசிங்கமாக இருந்தது. அதை மாமியாரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் மருமகனிடம் நீங்கள் பல் தேய்ப்பது இல்லையா என்று கேட்கவும் முடியவில்லை. என்ன செய்வதென்று யோசித்தார் மாமியார். உடனே மருமகனிடம் ஒரு ரூ.20 கொடுத்து தெரு கடைசியில் கரும்பு விற்பனை செய்கிறார்கள், அந்த கரும்பு தஞ்சாவூரில் இருந்து வந்தது; சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். நீங்க போய் கரும்பு சாப்பிட்டு வாங்க மாப்பிளை என்று அனுப்பி வைத்தார்.

கரும்பு கடித்து சாப்பிட்டால் பல் மீது உள்ள அழுக்குகள், கறைகள் எல்லாம் போய்விடும் என்று கரும்பு சாப்பிட அனுப்பி வைத்தார். கரும்பு வாங்க கடைக்கு போன மருமகன், போகும் வழியில் ஒருவர் எள்ளு புண்ணாக்கு விற்பனை செய்துகொண்டிருப்பதை பார்த்தார். உடனே இருபது ரூபாய்க்கு எள்ளு புண்ணாக்கும் வெல்லமும் வாங்கி சாப்பிட்டு வீட்டிற்கு வந்தார். எள்ளு புண்ணாக்கு சாப்பிட்டதில் பற்கள் முன்பு இருந்ததை விட மோசமாகியிருந்தது. வீட்டிற்கு வந்த மருமகன் “பல்” லை பார்த்த மாமியார் தலையில் அடித்துக் கொண்டார்.

இதுதான் ஆவடி மக்களின் தற்போதைய நிலை..

(தொடர்ந்து பேசுவோம்)

– என்.கே.மூர்த்தி..

இதை படிக்காம போயிடாதீங்க !

MUST READ