(2)
ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் !
ஆவடியில் குடிநீர், கழிவுநீர் மட்டும் பிரச்சனை அல்ல, ஒட்டுமொத்த நிர்வாகமும் பிரச்சனையாகத்தான் இருக்கிறது. இவை அனைத்தும் மக்களுக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் அரசியல் வாதிகளுக்கு நன்றாக தெரியும். நன்கு அறிந்த சமூக அமைப்பை சேர்ந்தவர்களும் கண்டும் காணாமல் இருக்கிறார்கள்.
அதே போன்று நம்முடைய அனைத்து வேலைகளும் சுலபமாக நடந்துவிடும் என்ற அதிகமான நம்பிக்கையில் ஆவடி மக்கள் இருக்கின்றனர்.
ஆவடியில் பட்டா இல்லாத நிலத்தில் குடியிருப்பவர்களை விட பட்டாநிலத்தில் குடியிருப்பவர்கள் படும் துயரமும், வேதனையும் வார்த்தையில் வர்ணிக்க முடியாதவை.
முறையாக பட்டா கொடுக்க வேண்டிய இடங்களுக்கு பெயர் மாற்றத்திற்கு சென்றாலும், பட்டா கேட்டு விண்ணப்பித்தாலும் வருவாய் துறை அதிகாரிகள் அலைய விடுகின்றனர். அதை பின்னர் பார்க்கலாம்.
அதே இடத்திற்கு புதியதாக வரிகட்டுவதற்காகவும், கட்டிட அனுமதிக்காகவும் ஆவடி மாநகராட்சிக்கு செல்லக் கூடிய மக்கள் படும் துயரத்திற்கு அளவே இல்லை.
கட்டிட அனுமதி பெற வேண்டும் என்றாலும், வரி கட்ட வேண்டும் என்றாலும் வழக்கமான நடைமுறை சிக்கல் இருப்பது உண்மைதான். அதனை மக்களும் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் அருகில் உள்ள தாம்பரம் மாநகராட்சியில் அதிகாரிகள் வேலை செய்ய வில்லை என்றாலும், (காலி மனை பிரிவிற்கு வரி கட்ட வேண்டும் என்றால் முறையாக செலுத்த வேண்டிய தொகையை விட கமிஷன் பல மடங்கு அதிகமாக கேட்கிறார்கள்.) ஏதாகிலும் பிரச்சனை என்றால் மேயரிடம், துணை மேயரிடம் விஷியத்தை கொண்டு சென்றால் உடனே தீர்வு கிடைக்கிறது.
மேலும் மற்ற மாநகராட்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகளை சந்தித்து குறைகளை சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஆவடியில் அதற்கும் வாய்ப்பு இல்லை. மேயர், துணை மேயர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தும் அவர்கள் ”தும்பிக்கை வெட்டப்பட்ட யானையை போல்”அதிகாரம் இல்லாதவர்களாக வளம் வருகின்றனர். அதனால் அவர்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கும் சரியாக வருவது கூட இல்லை.
இதற்கு எல்லாம் யார் காரணம்? யார் மீதும் பழியை போடாமல் ஆழந்து சிந்தித்து பாருங்கள். இதற்கு வேறு யாரும் காரணம் கிடையாது. நாம் மட்டுமே காரணமாக இருக்கிறோம்.
நாம் வாக்களிக்கும் வெறும் இயந்திர தனமான மனிதனாக இருக்கிறோம். மனதளவில் குழப்பம் நிறைந்தவர்களாக இருக்கிறோம்.
ஆவடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட 48 கவுன்சிலர்களின் மனமும் தேக்கமடைந்து இருக்கிறது. மண்டல தலைவர்கள் 4 பேரும் உட்காருவதற்கு நாற்காலி இல்லாமல் செய்வதறியாமல் சுற்றி சுற்றி வருகின்றனர். யாரிடம் எதை சொல்வது? எப்படி சொல்வது? இதற்கெல்லாம் தீர்வு என்ன? என்று புலம்பி வருகின்றனர்.
ஆவடியில் வாக்களித்த மக்களும், வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்ற மக்கள் பிரதிநிதிகளும் என்ன செய்வதென்று தெரியாமல் ஒரே நேர் கோட்டில் இருக்கிறார்கள். இது எந்த மாநகரிலும் இல்லாத அதிசயம். எனக்கே எந்த அதிகாரமும் இல்லாதபோது நான் எப்படி மற்றவர்களுக்கு உதவமுடியும் என்று வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.
இதுவரை நம்மிடம் ஓட்டுவாங்கிய அந்த கவுன்சிலர் சரியில்லை, அந்த தலைவர் சரியில்லை என்றுதான் குற்றம்சாட்டி வந்திருக்கிறோம். அப்படிதான் பழகியிருக்கிறோம்.
முதன்முறையாக நாம் சரியில்லை, அடிப்படையில் இந்த மாநகரை நேசிக்கின்ற, சமுதாய மாற்றத்தை விரும்புகின்ற, வாழும் காலம் குறைவு, அதற்குள் இந்த ஊருக்கு ஏதாகிலும் செய்ய வேண்டும் என்று நினைக்கின்ற அனைவரும் “நாம்” எப்படி இருக்கிறோம் என்று கொஞ்சம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
நாம் சரியாக சிந்தித்து ஓட்டுக்கு பணம் வாங்காமல் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்திருக்க முடியுமா? முடியும்!
நாம் சரியாக இயங்கியிருந்தால் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க முடியும்.
இதுவரை இதை எல்லாம் செய்ய தவறிவிட்டோம் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று இந்த சமுதாயம், இந்த நகரம் இந்த நிலையில் இருப்பதற்கு நாமும் ஒரு காரணமாக இருக்கிறோம். நாம் மனதளவில் என்ன சிந்தனையில், என்ன குழப்பத்தில் இருக்கிறோமோ, அதே சிந்தனை, அதே குழப்பம், அதே வேதனை சமுதாயத்திலும் இருக்கிறது.
நாம் தான் சமுதாயம், நாம் இல்லாமல் சமுதாயம் இல்லை. இந்த ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் நாம் தான் காரணமாக இருந்து வருகிறோம் என்ற உண்மையை புரிந்துக் கொள்ள வேண்டும்.
மாற்றம் வெளியில் இருந்து வருவதல்ல, நம்மிடம் இருந்து தொடங்குவது. இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் இடது சாரிகள் மாற்றத்தை கொண்டுவருவார்கள் என்றும் வலது சாரிகள் மூலம் மாற்றம் நிகழ்ந்து விடும், புரட்சி ஏற்பட்டு விடும் என்று நம்பிக்கை வைப்பது தவறான சிந்தனை.
(தொடர்ந்து பேசுவோம்)
– என்.கே.மூர்த்தி