பாஜக எவ்வளவு முயற்சி செய்தாலும் 225 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப்பெற வாய்ப்பு இல்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுவதால் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
18வது மக்களவைக்கான தேர்தல் இரண்டு கட்டம் (Phase II) முடிந்துவிட்டது. இன்னும் ஐந்து கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் அவருடைய சகாக்களும் மிகவும் பதற்றத்துடன் பேசுகின்றனர். பேசுவதோடு மட்டுமில்லாமல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கூட்டியும், குறைத்தும், சில இடங்களில் குழப்பியும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர்கள் ஆட்சிபுரியும் மாநிலங்களில் தான் அதிக பதற்றம் இருப்பதற்காக அறியப்படுகிறது.
இன்று பாஜக 12 மாநிலங்களில் நேரடியாகவும், 2 மாநிலங்களில் கூட்டணி ஆட்சியிலும் இருந்து வருகிறது. இந்த 14 மாநிலங்களில் 296 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதில் கடந்த 2019ல் நடந்த மக்களவை தேர்தலில் 219 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.
உத்தரப்பிரதேசம் 80/62, ஹரியானா 10/10 உத்தரகாண்ட் 5/5 ராஜஸ்தான் 25/24 மத்தியப்பிரதேசம் 29/28, குஜராத் 26/26 மகாராஷ்டிரா 48/23, பீகார் 40/17 சத்தீஸ்கர் 11/9, அசாம் 14/9 ,அருணாசல பிரதேசம் 2/2, திரிபுரா 2/2, மணிப்பூர் 2/1, கோவா 2/1 ஆகிய பாஜகவிற்கு செல்வாக்கு உள்ள மாநிலங்களில் தற்போது சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பு வருகிறது.
பாஜக ஆளும் மாநிலங்களில் கடந்த முறை பெற்ற வெற்றி தற்போது சற்று குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உதாரணத்திற்கு உத்தரப்பிரதேசத்தில் கடந்த தேர்தலில் 62 தொகுதிகளில் பாஜக வெற்றிப்பெற்றது. அந்த வெற்றி இந்த தேர்தலில் கிடைக்க வாய்ப்பு மிகவும் குறைவு. அந்த மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மேலும் அங்கே செல்வாக்குள்ள ராஜப்புத்திர சமூகத்தினர் இந்த முறை பாஜகவிற்கு வாக்களிக்க கூடாது என்று தீர்மானித்துள்ளனர். அதனால் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 62 தொகுதிகளில் குறைந்தது 10 தொகுதிகளை பாஜக இழக்க வாய்ப்பு இருக்கிறது.
குஜராத் மாநிலத்தில் கடந்த முறை பாஜக 26/26 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது அங்கே காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைந்திருப்பதால் 5-6 தொகுதிகள் காங்கிரஸ் கூட்டணி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் 65/62 பாஜக வெற்றி பெற்றது. தற்போது குறைந்தது 20 தொகுதியாகிலும் காங்கிரஸ் கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறது.ஹரியானாவில் கடந்த முறை 10/10 என்று பாஜக பெற்றிருந்தது. தற்போது அங்கே தலைகீழ் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது.
பாஜகவிற்கு சிக்கலை உருவாக்கும் மாநிலங்கள்
மகாராஷ்டிரா, பீகார் ஆகிய இரண்டு மாநிலங்களில் 48+40= 88 தொகுதிகள் உள்ளன. இந்த இரு மாநிலங்களில் கடந்த 2019 தேர்தலில் 80 தொகுதிகளுக்கு மேல் பாஜக கூட்டணி பெற்றது. இந்த தேர்தலில் நேர் எதிரான விளைவுகளை பாஜக சந்திக்கும் என்றும் 30 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறாது என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த சூழ்நிலையில் உள்ள களநிலவரத்தை பாஜக துல்லியமாக உணர்ந்துள்ளது. அதை காப்பாற்றிக்கொள்ள, தொகுதிகளை தக்க வைத்துக் கொள்ள பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அந்த அதீத முயற்சியே அக்கட்சியை பதற்றமடைய வைத்துள்ளது. பொய்யான பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகிறது.தவறான பிரச்சார வியூகத்தை கையாண்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு நாட்டு மக்களின் மனதில் பிரிவினை விதையை விதைத்து வருகிறது. இது மிகவும் ஆபத்தான செயல் திட்டம்.
பாஜக ஆளும் மாநிலங்களில் குறைந்த எண்ணிக்கையில் காங்கிரஸ் கூட்டணி வெற்றிப்பெற்றாலும் போதும். பாஜக ஆட்சி அமைப்பதை தடுத்துவிட முடியும்.
பாஜக எப்படி முயற்சி செய்தாலும், முட்டி மோதினாலும் இந்த தேர்தலில் 225 தொகுதிகளை தாண்டுவதற்கு வாய்ப்பு இல்லை என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.