டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள 41 எப்.ஐ.ஆர்-களில், 34 அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பானது என்று மூத்த பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் நடைபெற்ற குற்றத்திற்காக தற்போதைய அமைச்சர் மற்றும் முதலமைச்சர் மீது குற்றம்சாட்டுவது தவறானது என்றும் அவர் கூறியுள்ளார்.

டாஸ்மாக் விவகாரத்தில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் உள்ள சதி குறித்தும், அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்தும் பத்திரிகையாளர் செந்தில்வேல் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- பாஜக போன்ற ஒரு பித்தலாட்ட கட்சி உலகத்திலேயே கிடையாது. ஒரு பிரச்சினையை கையில் எடுத்து மக்கள் மன்றத்தில் அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்துவதில் பாஜக கைதேர்ந்தது. ஏனென்றால் வடஇந்திய ஊடகங்கள் முழுவதும் அவர்களது கைகளில் உள்ளன. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை கையில் வைத்துக்கொண்டு மகாத்மா காந்தியை கூட தேச துரோகி என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் லாபி செய்கிறார்கள். இன்றைக்கு திமுக ஆட்சியில் குறைபாடுகளே இல்லை என்று நாம் சொல்லவில்லை. நிச்சயமாக ஆங்காங்கே போதாமைகள் இருக்கலாம், குறைபாடுகள் இருக்கலாம். அதை சுட்டிக்காட்டும்போது முதலமைச்சர் பல்வேறு இடங்களில் சரி செய்கிறார். ஆனால் பாஜகவினர் அதை மிகைப்படுத்தி பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று மிகைப்படுத்தி, எப்படி 2ஜி விவகாரத்தில் அபாண்டமான பழியை சுமத்தி மத்தியில் ஆட்சியை பிடித்தார்களோ, அதேபோல் இன்றைக்கு திமுக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டை சொல்லலாம் என நினைக்கிறார்கள். இது நிற்காது.
முதலில் இந்த அமலாக்கத்துறை யார் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் இதுவரை பிடித்திருக்க கூடிய ஊழல்வாதிகள் யார் என்று பார்த்தால்? ஒருவர் பெயர் கிருண்ணன், மற்றொருவர் கண்ணையன். விவசாயிகளான இவர்களுக்கு வங்கிக்கணக்கே கிடையாது. இவர்கள் சட்ட விரோதமாக பண பரிவர்த்தனை செய்து, பல கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டதாக அவர்களுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதில் என்ன விஷயம் என்றால், அவர்கள் சார்ந்திருக்கும் சமூகத்தின் பெயரை சொல்லி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதன் பின்னணியில் ஒரு பாஜக மாவட்ட நிர்வாகி, அவர்களுடைய நிலத்தை அபகரிப்பதற்காக அமலாக்கத்துறை வைத்து மிரட்டல் விடுத்துள்ளது அம்பலமானது. இப்படி ஒரு மாவட்ட நிர்வாகியே, அமலாக்கத்துறையை வைத்து விவசாயிகளை மிரட்ட முடிகிறது என்றால், மோடியையும், அண்ணாமலையையும் நினைத்துப் பாருங்கள். அவர்கள் ஏன் திமுக அரசை மிரட்ட மாட்டார்கள்? திண்டுக்கல்லில் அங்கித் திவாரி என்கிற அமலாக்கத்துறை அதிகாரி, ஒரு மருத்துவரை மிரட்டி பணம் பறிக்கிறார்.
நாட்டில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அங்கித் திவாரி என்கிற அதிகாரி மருத்துவரை மிரட்டி காசு வாங்க முடிகிறது என்றால், இந்தியா முழுக்க அமலாக்கத்துறையினர் எத்தனை பேரை மிரட்டி இருப்பார்கள். எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும். ஏற்கனவே டாஸ்மாக் விவகாரத்தை வைத்துதான் பாட்டிலுக்கு மேல் ரூ.10 வாங்குகிறார்கள் என்று செந்தில்பாலாஜி மீது ஒரு கருத்தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். தற்போது செந்தில்பாலாஜி மீது நடைபெறும் வழக்கு என்பது அவர் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அவர் மீது சொல்லப்பட்ட வழக்கு ஆகும். இதன் மீது நடவடிக்கை எடுத்தால் திமுக அரசு மீது எப்படி குற்றம்சாட்ட முடியும்? அதனால் என்ன செய்தார்கள் என்றால் சமூக வலைதளங்கள் மூலம் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 வாங்குவதாகவும், ஊழல் நடைபெறுவதாகவும் கருத்தை உருவாக்கினார்கள். அதன் பின்னர் அதிமுக ஆட்சிக்காலத்தில் வந்த குற்றச்சாட்டில் அவரை கைது செய்தார்கள். ஆனால் பொதுமக்கள் மத்தியில் திமுக ஆட்சியில் டாஸ்மாக்கில் பெரிதாக எதோ செய்துவிட்டார். அதனால் தான் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை போன்ற பிம்பத்தை ஏற்படுத்தினார்கள். அந்த வழக்கில் தற்போது செந்தில்பாலாஜி பிணையில் வெளியே வந்துள்ளார்.
2026 தேர்தலுக்கு ஓராண்டு இருக்கும்போது தற்போது மீண்டும் இந்த பிரச்சினையை கையில் எடுக்கிறார்கள். ஆயிரம் கோடி ஊழல் என்று அண்ணாமலை சொல்கிறார். எந்த அடிப்படையில் என்றால் மொத்தம் 41 எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 34 எப்.ஐ.ஆர்கள் அதிமுக ஆட்சிக்காலத்தில் பதிவு செய்யப்பட்டன. 2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் நடத்திய சோதனைகளில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 7 வழக்குகள் பதிவு செய்தார்கள். அமலாக்கத்துறைக்கு ரூ.30 லட்சத்திற்கு மேற்பட்ட வழக்குகளை தான் விசாரிக்க முடியும். அதனால் இந்த 7 எப்.ஐ.ஆர்கள் மட்டுமின்றி அதிமுக ஆட்சிக்காலத்தில் பதிவு செய்யப்பட்ட 34 எப்.ஐ.ஆர்களையும் சேர்த்து விசாரிக்கிறார்கள். இப்போது ரூ.30 லட்சத்திற்கு மேலே வந்துவிட்டது என்பதால் பெரிய வழக்கு என்று சொல்லி அமலாக்கத்துறை உள்ளே வருகிறது.
தற்போது 34 வழக்குகளுக்கு பொறுப்பற்க வேண்டியது யார்? என்றால் அதிமுக. ஆனால் நீங்கள் யாரை குற்றம்சாட்டுகிறீர்கள் என்றால் செந்தில் பாலாஜி. உச்சபட்சமாக அண்ணாமாலை எங்கே செல்கிறார் என்றால் இதற்கு முதல் குற்றவாளியே முதலமைச்சர் என்று சொல்கிறார். அதிமுக ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட வழக்குகளுக்கு, நீங்கள் இந்த ஆட்சியினுடைய அமைச்சரை, முதலமைச்சரை குற்றம்சாட்டுவீர்களா? அப்படி என்றால் இது திட்டமிட்டு மக்களை மடைமாற்றும் வேலையாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.