முன்னாள் ராணுவத்தலைவர் எம்.எம்.நரவணேவின் (“FOUR STARS OF DESTINY”) புத்தகம், வெளியாகும் முன்பே எப்படி மற்றவர்கள் கைகளுக்குப் போனது என்று தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக பதிலளிக்க பெங்குயின் பதிப்பகத்தையும் தொடர்பு கொண்டிருக்கிறது.
பொதுவாக முக்கிய நபர்களின் புத்தகங்கள் வெளியாவதற்கு முன்னே அதன் உள்ளடக்கங்கள் ஊடகங்களில் வெளியாவது அரிதான விஷயம் அல்ல. குறிப்பாக குறிப்பாக பாதுகாப்பு துறையைச் சேர்ந்த உயரதிகாரியின் நூல் என்பதால் முன் பரிசீலனைகள் நடைபெறுவது வழக்கம். இந்நூலில் பிரதமர் குறித்து இடம்பெற்றுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், “புத்தகம் எப்படி கசிந்தது?” என்பதுதான் தற்போது முக்கிய விவகாரமாக மாறியுள்ளது.
பிரதமர் மோடி பலவீனமான ஒரு தலைவர் என்பதற்கு நம்மிடையே இருக்கும் பலமான ஆதாரம் சீன எல்லைப் பிரச்சினைதான். 2020ல் டோக்ளம் பகுதியில் இந்திய சீன ராணுவங்களிடையே கைகலப்பு நிகழ்ந்த பொழுதில் துவங்கி ‘சீனா’ எனும் சொல்லே இதுவரை அவர் வாயில் இருந்து வரவில்லை. அந்தப் பிரச்சினை வெடித்த உடனேயே நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் ‘யாரும் உள்ளே வரவில்லை; யாரும் வெளியே போகவில்லை,’ என்று கருத்தளித்தார். எனில் செத்துப்போன வீரர்களைக் கொன்றது யார் என்ற கேள்வி வந்தது. பிரதமர் அலுவலகம் அதை எதிர்பார்த்திருக்கவில்லை போல. ஆனால் பதில் வரவில்லை.

அதற்குப் பின் சீனாவுக்கு எதிராக சர்ஜிகல் ஸ்ட்ரைக் வரும்; ஆபரேஷன் மங்கல்சூத்ரா வரும் என்றெல்லாம் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள்; டிக்-டாக் தடை வந்தது!
அப்போது ராணுவத்தலைமை வகித்த நரவணே எழுதி இருக்கும் புத்தகம் ராணுவத்திடம் பரிசீலனைக்கு இருக்கிறது. இதன் ஒரு பிரதி தற்போது பின்வாசல் வழியாக ராகுல் காந்தி வசம் வந்து தேசிய சர்ச்சையாகி இருக்கிறது. இது குறித்த விவாதத்தில் இருந்து தப்பிக்கத்தான் பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வரவே இல்லை. கேட்டால் ஜோதிமணி அடிப்பார் என்று பயந்து விட்டதாக சபாநாயகர் சொல்கிறார்.
சீன ராணுவம் தாக்குதலுக்கு வந்து கொண்டிருக்கிறது. என்ன செய்வது? இந்தக் கேள்வியை ராணுவத் தலைமை கேட்கிறது. இந்தியாவில் ராணுவ ஆட்சி நடந்து கொண்டிருந்தால் முடிவை ராணுவமே எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நடப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி. விரிந்த மார்பு கொண்ட விஸ்வ குரு எனும் வாட்ச்மேன் ஆட்சி! (இதையெல்லாம் சொல்வதற்கு எனக்கே கூசுகிறது. ஆனால் இது எல்லாமே மோடி தன்னைக் குறித்து தானே சொல்லிக் கொண்டதுதான்.) அப்படிப்பட்டவர் காணாமல் போய் விட்டார். பிரதமர் அலுவலகத்தில் இருந்து ‘எது சரியோ அதை செய்யுங்கப்பா’ என்று பதில் வருகிறது.
இதை சொல்வதற்கு விஸ்வ குரு தேவையா என்ன? எங்கள் தெரு முனையில் பூக்கட்டுகிற பூக்காரம்மா சொல்வாரே?
எனக்கு இந்த சர்ச்சையில் இருக்கும் ஆச்சரியமெல்லாம் இதுதான்: விஷயம் ராணுவம் சம்பந்தப்பட்டது; தேசப் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. பொருளாதாரம், வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு, சமூக நீதி பற்றியெல்லாம் இந்துத்துவர்கள் பெரிதாக கவலைப்பட்டதாக நமக்குத் தெரியாது. ஆனால் ராணுவம் மற்றும் தேசப் பாதுகாப்பு இரண்டுமே தங்களுக்கு இரண்டு கண்கள் போல பில்டப் கொடுப்பார்கள். தங்களைத் தவிர மீதி யாருக்குமே இந்த தேச எல்லைகள் குறித்த கவலை இல்லை என்ற ரேஞ்சுக்குப் பேசுவார்கள். அமித் ஷா இதை விடப் பற்பல மடங்கு மேலே! சும்மா ஒரே ஒரு பங்களாதேச விவசாயி எல்லை தாண்டி வந்தாலே அவரையும் அவர் குடும்பத்தையும் பிடித்துப் போய் வங்காள விரிகுடாவில் தூக்கி வீசி விடுவார்! (இதுவும் அவரே சொன்னதுதான்!)
வந்திருப்பது முஸ்லிம் விவசாயி அல்ல! சீன ராணுவம். சும்மா வரவில்லை. இந்திய வீரர்களை அடித்துக் கொல்கிறார்கள். ஆனால் அமித் ஷாவும் மோடியும் காணோம். அப்போது அவர்கள் அந்த சண்டை குறித்து எதுவுமே செய்யவில்லை என்ற தகவல் இப்போது வருகிறது. அதுவும் ராணுவத் தலைமையிடம் இருந்தே!
நியாயமாகப் பார்த்தால் இந்துத்துவர்கள்தான் கூச்சல் போட்டுக் கொண்டு இருக்க வேண்டும்! மோடியை ராஜினாமா செய்யச் சொல்லி அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால் எதுவுமே நடவாத மாதிரி மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். 75 வருடங்களுக்கு முன்பு சீன விஷயத்தில் நேரு தவறியதற்கு இன்று வரை கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பவர்கள் நான்கு வருடங்கள் முன்பு மோடி தவறியதை கண்டுகொள்ளாமல் கடக்கிறார்கள்.
பக்தி என்பது மதத்தில் மட்டுமல்ல, அரசியலிலும் கேவலமான ஒரு விஷயம் என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நேற்று வரை தேசபக்திக்குத் தாங்கள்தான் ஹோல்சேல் டீலர் என்ற ரேஞ்சுக்கு பேசிக் கொண்டிருந்தவர்களின் நிலைமை இன்று பரிதாபமாக இருக்கிறது. மோடியை தப்பிக்க விட்டு, புத்தகம் எப்படி லீக் ஆகப் போச்சு என்று பதிப்பகத்தை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மொத்தத்தில், முன்னாள் ராணுவத் தளபதியின் புத்தகம் வெளியாகும் முன்பே கசிந்திருப்பது சட்டரீதியான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அதில் உள்ள எல்லைத் துறை சம்பந்தமான குறிப்புகள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. காவல் நேரத்தில் தூங்கி விட்ட வாட்ச்மேனைக் காப்பாற்ற வேண்டி பாரத மாதா பலி கொடுக்கப்பட்டுக் கிடக்கிறாள்.
”பொருளாதாரம் ஆயுதமாக்கப்பட்டதற்கான சிறந்த உதாரணம்” இந்த ஒப்பந்தமே – ராகுல் காந்தி சாடல்


