புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றி நாம் இதற்கு முன்பு அறிந்ததை காட்டிலும் கவிஞர் கண்ணதாசன் கூடுதலாகவே அவரை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். கவிஞர் கண்ணதாசன் எழுதிய எம்.ஜி.ஆரின் உள்ளும் புறமும் என்ற நூல் திருமாறன் நிலையம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன் இரண்டாம் பதிப்பு 1977ல் வெளிவந்துள்ளது. ஆனால் அந்த நூல் பெருவாரியான மக்களுக்கு சென்றடையாமல் முடக்கப்பட்டுள்ளது. அந்த அறிய நூலில் உள்ள தகவல்கள் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில் கவிஞர் கண்ணதாசன் எழுதியதை அப்படியே வெளியிடுகிறோம். இதில் உள்ள கருத்துகள் கவிஞர் கண்ணதாசன் அவர்களை சார்ந்தது.
ஆசிரியர்- என்.கே.மூர்த்தி
எம்.ஜி.ஆரைப் பற்றிய ரகசியங்கள்
என் இனிய நண்பர்களே!
எம்.ஜி.ஆரை பற்றிய ரகசியங்கள், எம்.ஜி.ஆரை பற்றி என்னென்ன ரகசியங்களை சொன்னால் அவர் பதறுவார், துடிப்பார் என்பது எனக்கு தெரியும். அவரது அந்நிய செலாவணி ஊழல் பற்றி நாளே நாலு வரிகள்தான் சொன்னேன்.

அதற்கு அவரது கருப்பு பணத்தால் நடத்தப்படும் பத்திரிகை “மான் குட்டி மீது பன்றி ஏறி விழுவது போல விழுந்திருக்கிறது“.
ஆகவே அவரது எல்லா ரகசியங்களையும் வெளியிட வேண்டிய அவசியம் எனது கடமையாகிறது. அவர் கூட்டம் என்னை ஏசுவது போல் முட்டாளே, நாயே, கழுதையே என்று நான் அர்ச்சிக்க போவதில்லை.

பாவம், அந்தப் பிராணிகளுக்கு நான் அவமானத்தை தேடி தரப் போவதில்லை. ஒரு நடிகனுக்கு வேண்டிய திறமையோ, தலைவனுக்கு வேண்டிய பொறுமையோ, நிதானமோ இல்லாதவர். இன்றைக்கும் அவரை பகுத்தறிவு இல்லாத ஏழை மக்களும், படித்த முட்டாள்கள் மட்டுமே நம்புகிறார்கள். தமிழ்நாட்டின் நூற்றுக்கணக்கான கல்லூரிகளில் ஒரு கல்லூரியில் கூட அவரை ஆதரிக்கும் மாணவர்கள் வெற்றி பெறவில்லை.
நடந்து முடிந்த தேர்தலில் கூட படித்தவர்கள் ஓட்டும், சிந்திக்கும் திறனுடையவர்கள் ஓட்டும் அவருக்கு விழவில்லை. கருத்து பிரச்சாரம் தீவிரமாக இல்லாத இடங்களில் அவர் காலூன்றி உள்ளார்.
ஆகவே அவர் படங்களில் நடிப்பது போல நிஜ வாழ்க்கையிலும் யோகியரா என்பதை படிக்காத பாமர மக்களுக்கும் எடுத்து சொல்வது எமது கடுமையாகிறது.
அவர் நன்கொடை கொடுத்த விபரங்கள் பலரிடம் வாங்கிய கருப்பு பணத்தை அபகரித்த விபரங்கள் சந்திரபாபுவை படுத்திய பாடு, அவரது ஆணவத்தால் பாதியில் நின்று போன படங்கள், அந்த படங்களால் தங்களின் வாழ்வையே சீரழித்துக் கொண்ட தயாரிப்பாளர்கள், அவரது வருமான வரி லீலைகள் முழுவதையும் சொல்கிறேன்.

ஒழுங்காக பணம் சேர்த்து அவரை வைத்து படம் எடுக்க ஆரம்பித்து கடங்காரனாகி துடித்துக் கொண்டிருக்கும் அசோகனில் இருந்து, எடுத்ததை முடிக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர் வரையில் விபரங்களை உங்களுக்கு தருகிறேன்.

இன்னொன்று, அரசியலில் அந்தரங்கத்தை வெளியிடுவது உதவாது என்று கருதுபவன் நான்.
ஆனால், ஒரு நபரை உலகம் அறிந்து கொள்வதற்கு அது தேவைப்படுகிறது.
16 வயது என்று சொல்லி ஒரு இளம் பெண் வந்தால் அவளை அவர் எப்படி ஒதுக்கி கொண்டு போவார் என்பதற்கு அன்றிலிருந்து இன்று வரை நடந்த விஷயங்களை நாகரீகமான நடையிலேயே நான் விவரிக்கிறேன்.
நாணயம் இல்லாத ஒருவர் நாணயஸ்தன் போல காட்சி அளிக்கிறார்.
நடத்தை கெட்ட ஒருவர் உத்தமனாக வேஷம் போடுகிறார்.
நான் தொடர்ந்து விவரிக்க போவதை அவரும் வரவேற்க வேண்டும்.
ஏனென்றால், என்னைப் பற்றிய எந்த ரகசியங்களும் வெளிப்படுவதை உற்சாகத்தோடு வரவேற்பவன் நான்.
நான், அவரது கொடை விபரங்களையும், வாங்கிய விபரங்களையும் முதற் பகுதியாக வெளியிடுகிறேன்.

(தொடரும்)…