இந்தி எதிர்ப்பு போராட்டத்தை திமுக கூட்டணி அரசியலுக்காக செய்ய வில்லை, தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக செய்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளதற்கு பதில் அளித்து ஆளுர் ஷாநவாஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- அண்ணாமலை முடிந்தால் திமுகவினர் அமலாக்கத் துறை அலுவலகத்தில் சென்று இந்தியை அழிக்க சொல்கிறார். அழித்து விடுவோம் அதனால் என்ன? போஸ்ட் ஆபீஸ், இன்கம்டாக்ஸ் ஆபீஸ், ரயில் நிலையங்கள் என எங்கெங்கு இந்தி மொழி தென்படுகிறதோ அங்கெல்லாம் அழிக்கப்படுகிறது. அது இந்தி மொழி மீதான எதிர்ப்பு கிடையாது. இந்தி திணிப்பு மீதான எதிர்ப்பு. இது 1937 முதல் தமிழ்நாடு கண்டுவருகிற ஒரு அறப்போர். தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை தர மாட்டோம் என மத்திய அமைச்சர் திமிராக பதில் சொல்கிறார். அண்ணாமலைக்கு தமிழ்நாட்டின் மீது பற்றி இருந்தால் அவர் என்ன சொல்ல வேண்டும்? மத்திய அமைச்சரிடம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை சொல்லி புரிய வைத்து நிதியை கொடுங்கள் என்று சொல்ல வேண்டும். ஆனால் அண்ணாமலை அப்படி சொல்லாமல் இங்கே வந்து கம்பு சுத்தினால் என்ன செய்வது?

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிப்பது தவறு என்று சொல்கிறார். எங்கள் கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என சொல்வது மத்திய அரசா? அல்லது மாநில அரசா? மத்திய அரசு வங்கும் நிதியை வேண்டாம் என்று சொன்னாரா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்படி என்றால் எடப்பாடி பழனிசாமி சொல்வது நியாயம். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் மேல் கடிதம் எழுதுகிறார். பேரிடர் நிதியை கொடுங்கள், என்று நேரில் சென்று பிரதமரை சந்திக்கிறார். எங்களுக்க வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவையை கொடுங்கள் என்று நமது நிதியமைச்சர், மத்திய நிதியமைச்சரை நேரில் சந்தித்து கேட்கிறார். எல்லாவற்றுக்கும் போய் போய் கதவை தட்டுகிறார்கள். உரிய அழுத்தம் கொடுக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புகிறார்கள். என்ன என்ன வழிமுறைகள் உள்ளதோ அந்த வழியில் எல்லாம் கேட்கிறார்கள். கேட்டும் தர மறுக்கிறது மத்திய அரசு. இப்போது மோதல் போக்கை யார் கையாளுகிறார்கள். தூத்துக்குடி, நெல்லையில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்டபோது மத்தியக்குழுவே வந்து மீட்பு பணிகளை பாராட்டி விட்டு சென்றது. ஆனாலும் மத்திய அரசு பேரிடர் நிதியை தர மறுக்கிறது. அப்படி என்றால் மோதல் போக்கை கடைபிடிப்பது யார்?. எடப்பாடிக்கு இன்னும் மோடியை, அமித்ஷாவை, நிர்மலா சீதாராமனை எதிர்த்து கேள்வி எழுப்புவதற்கு துணிவு இல்லை. இவர் எப்படி பாஜக எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பார்.
ஒரு எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி, இன்று திமுகவிற்கு எதிரான எதிர்க்கட்சிகளை எல்லாம் திமுக அணிக்கு எதிராக ஒரு வலுவான அணியை கட்ட வேண்டிய தேவையும், வாய்ப்பும் உள்ளவர். ஏன் அவருக்கு அந்த கூட்டணி அமையவில்லை. ஏற்கனவே இருந்த கூட்டணி ஏன் சிதைந்து போனது? ஏன் திமுக கூட்டணியில் ஒரு கட்சியைக்கூட எடப்பாடியால் கழற்ற முடியவில்லை. ஏனென்றால் அவரிடம் அரசியல் நேர்மை இல்லை. இப்போதும் வக்பு சட்டம், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அவரது நிலைப்பாடு என்ன? தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கமாட்டேன் என்று சொன்ன அமைச்சருக்கு கூட எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவிக்க வில்லை. பாஜக எதிர்ப்பில் அதிமுக முனை மழுங்கி கிடக்கிறது. அதிமுக மிகப்பெரிய பின்னடைவை ஏன் சந்தித்துள்ளது என்றால் அதனிடம் வெளிப்பட வேண்டிய ஒரு எதிர்க்கட்சி உணர்வு வரவில்லை.
இதுவே திமுக எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் எவ்வளவு பெரிய அணி சேர்க்கை நடத்தி இருப்பார்கள். தமிழ்நாட்டு அரசியலை கொந்தளிக்க வைத்திருப்பார்கள். இன்றும் ஆளுங்கட்சியாக இருந்து திமுகதான் அந்த எதிர் அரசியலை முன்னெடுத்து உள்ளது. திமுக கூட்டணி நாங்கள்தான் அந்த எதிர் அரசியலை கையில் வைத்துள்ளோம். ஆளுங்கட்சி திமுக. முதலமைச்சர் இருக்கிறார். ஆனால் எல்லோரும் ரோட்டில் நின்று போராடி கொண்டிருக்கிறார்கள். மத்திய அமைச்சர் சொன்னதும், இந்த போராட்டத்தை நடத்த வேண்டியது யார்? அதிமுக கூட்டணியின் பங்களிப்பு என்ன ஆகிவிட்டது.
எதிர்க்கட்சியான அதிமுக, ஆளுங்கட்சி வேடிக்கை பார்ப்பது போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஆளுங்கட்சியான திமுக எதிர்க்கட்சி போல ரோட்டில் இறங்கி போராடி கொண்டிருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு கையில் எடுத்த அதே ஆயுதத்தை இன்றும் அடைகாத்து வருவது அதிமுகவா? அல்லது திமுக தலைமையிலான கூட்டணியா?. இதை நாம் அரசியலுக்காக செய்ய வில்லை. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக செய்கிறோம். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம். அனைத்துக்கட்சிகளின் கொள்கையை வெளிப்படுத்து திமுக கூட்டணிதான். மோடி, பாஜகவை எதிர்க்க திமுக அணிதான் சரியான அணி என மக்கள் பார்க்கிறார்கள். நாங்களும் அதை சரியாக செய்கிறோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.