இந்தியா – பாகிஸ்தான் போர் தொடர்பாக வடக்கு ஊடகங்கள் உண்மைக்கு மாறான தகவல்களை வழங்கி வருவதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இதன் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- இந்தியா – பாகிஸ்தான் இடையே அதிகாரப்பூர்வமாக போர் இன்னும் அறிவிக்கப்பட வில்லை. இதுவரை நாம் என்ன சொல்லி உள்ளோம். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக தீவிரவாத முகாம்களை தாக்கியுள்ளோம். இதற்கு மேல் தாக்குதலை விரிவாக்க விரும்பவில்லை என்று ராணுவ தளபதி சொல்கிறார். அதோடு முடிந்துவிட்டது என்றால் பாகிஸ்தான் அவர்கள் தரப்பில் இருந்து வேறு ஒரு நியாயத்தை சொல்வார்கள்.
அடிப்படையான பிரச்சினைகள் வெளி நாட்டு பத்திரிகைகள் மற்றும் உள்நாட்டு பத்திரிகைகளில் பார்த்தோம் என்றால் 2 காரணங்களை சொல்கிறார்கள். ஒன்று முனிர் டாக்ட்ரின். மற்றொன்று மோடி டாக்ட்ரின். முனிர் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆவார். இந்த 2 எம்-களில் உள்ள அடிப்படையான ஒற்றுமை என்ன என்றால்? இருவருமே மதவாத தேசியத்தை கட்டமைக்க விரும்புபவர்கள். மஸ்குலார் டெமாக்ரசி தற்போது நம்முடைய நாட்டில் கடைபிடிக்கப்படும் ஆட்சி முறையாகும். தேசம், தேசபக்தி, சனாதன தர்மம் உயர்வானது. பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜின்னா காலம் பற்றி பேசுகிறார். இந்து, முஸ்லிம் கலாச்சார வேற்றுமை குறித்து பேசுகிறார். அப்போது முனிர் சொல்வதற்கும், நாம் சொல்வதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இதில் எது உயர்ந்தது. எது தாழ்ந்தது என்பது கிடையாது. இந்த யுத்தத்திற்கு தொடக்கப்புள்ளி என்ன? பஹல்காம் தாக்குதல். அதுபோன்ற எவ்வளவோ தாக்குதல் நடைபெற்றுள்ளன. பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஏவிவிட்டது. ஆனால் தடுக்கத் தவறியது நமது குற்றம்தானே.
பயங்கரவாதத்தை தடுக்கவே பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வருகிறோம் என்று பிரதமர் மோடி சொன்னார். எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது. ஏன் பயங்கரவாதத்தை நம்மால் தடுக்க முடியவில்லை. பாகிஸ்தானின் பிரச்சினை என்ன என்றால்? அரசியல் தலைமையை விட ராணுவத் தலைமைக்கு அங்கே அதிக முக்கியத்துவம் உள்ளது. ராணுவம் சூப்பர் பிரைம் மினிஸ்டர் போன்று செயல்படுகிறது. நாம் அரசியலமைப்பின் அடிப்படையில் செயல்படுகிற ஒரு நாடு. ராணுவ ஆட்சி காரணமாக பாகிஸ்தான் 1971ஆம் ஆண்டு நாடு இரண்டாக பிரிந்தது. கிழக்கு பாகிஸ்தான் இன்று வங்க தேமாக மாறியுள்ளது. அதற்கு காரணம் ராணுவத்திற்கு கொடுக்கப்பட்ட அதீத முக்கியத்துவமாகும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை விட, ராணுவம் தங்களை உயர்ந்தவர்களாக கருதுகிறபோது, குடியரசு அங்கே தோற்று போகிறது.
அமெரிக்கா எப்போதும் இரட்டை நாக்குகளுடன்தான் பேசும். பாகிஸ்தானின் அரசியல் என்பதே மூன்று A தான். Allah, America, Army. பாகிஸ்தானின் சர்வதே பயங்கரவாதத்தின் முக்கிய ஸ்பான்சர் அமெரிக்கா தான். ஆப்கானிஸ்தான் போரின்போது அமெரிக்க படைகளுக்கு உதவியதன் காரணமாக தான் பாகிஸ்தான் ராணுவத்திற்கு பல்வேறு ஆயுத உதவிகள் கிடைத்தது. இன்றைக்கு சீனாவும் அதே தவறைதான் செய்கிறது. இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட பல ஏவுகணைகள் சீனாவின் அடையாளங்களுடன் தான் உள்ளது. இதுபோன்ற போர் சூழல்களின்போது உலக நாடுகள் தங்களின் சொந்த அரசியல் லாபங்களுக்காக கடைபிடிக்கின்ற கொள்கையால் மற்றவர்களுக்கோ, பொதுமக்களுக்கோ ஆபத்தாக முடிகிறது. பஹல்காம் தீவிரவாத தாக்குதல். இத்தனை பெண்களின் குங்குமம் பறிபோனது என்பது கண்டிப்பாக அனுதாபத்தையும், தேசபக்தி உணர்வையும் ஏற்படுத்தும்.
பஹல்காம் தாக்குதலில் இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்கப்பட்டது. அதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நிகழ்த்தப்பட்டது. ஆனால் அதற்கும் பிரச்சினை பெரிதாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் பாகிஸ்தான். இந்தியா தான் காரணம் என்று அவர்கள் தரப்பு சொல்கிறது. இதில் எது சரியானது என்று கண்டுபிடிக்க முடியாது. நம்மை பொருத்தவரை நமது ராணுவம் என்ன சொல்கிறதோ அதை தான் நம்புவோம். தொலைக்காட்சிகள் சொல்வதை நம்ப மாட்டோம். வடஇந்திய ஊடகங்களில் பழைய காட்சிகளை எல்லாம் எடுத்துப்போட்டு லாகூர் தாக்கப்பட்டது. கராச்சி துறைமுகம் தாக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்.
ஃபேக் நியூஸ் பிரச்சினை என்பது சமீப காலமாக ரொம்ப அதிகரித்துவிட்டது. ஒரு காலத்தில் தேசிய செய்தி நிறுவனங்கள் அல்லது உலக செய்தி நிறுவனங்கள் மட்டும் தான் போர் செய்திகளை கொடுக்க முடியும். அவர்களை தவிர வேறு யாரிடமும் போர் செய்தியாளர்கள் கிடையாது. தற்போது செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் சமூகவளைங்கள் போர்ச் செய்திகளாக போடுகிறார்கள். அது மிகவும் ஆபத்தானது. அத்துடன் போலி செய்திகள் உருவாக்குகிற போலி தேசியவாதம் இன்னும் ஆபத்து வாய்ந்ததாகும். அது மக்களை மடைமாற்றி கொண்டுபோகும். அதனால் வெறுப்புணர்வு வளரும். அதை அரசியல் தலைமை எப்போதுமே தேர்தலுக்கு பயன்படுத்தும். இன்றைக்கு பஹல்காம் தாக்குதல்,ஆப்ரேஷன் சிந்தூர் என்று எல்லாவற்றையும் பாஜக அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துகிறது. அதில் மாற்றுக்கருத்து எதுவும் இருக்க முடியாது. இதற்கு முன்பும் அது பயன்படுத்தியுள்ளது. ஆனால் இதை பயன்படுத்தி டிவிக்கள் வெறுமனே வியூஸ்க்காக போர் செய்திகளை தவறாக சித்தரிப்பது மிகவும் தவறானதாகும். அதனால்தான் ராணுவ தளபதி, ராணுவம் அளிக்கும் தகவல்களை மட்டும் வெளியிடுங்கள் என்று சொல்கிறார். அதைதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆப்ரேஷன் சிந்தூர் என்கிற பெயருக்கு டிரேட் மார்க் பதிவுசெய்ய போட்டி நடைபெறுவது அற்பத்தனமானது ஆகும். நேற்று முதல் நூற்றுக்கணக்கானோர் பதிவு செய்துள்ளனர். திரைப்படங்களுக்கு டைட்டில் வைப்பது, ஒடிடி தளத்தில் புதிய சீரியல்களுக்கு பெயர் வைப்பதற்கும் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் போர்ச்சூழல். அதில் பாதிக்கப்படும் மக்கள். கடந்த 2 நாட்களாக நடைபெறும் சண்டையில் எவ்வளவு பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பது தெரியாது. ஆனால் பகல்காமை விட பல மடங்கு அதிகமாகத்தான் இருக்கும். அந்த உயிரிழப்பிலும் ஆண்களும் இருந்திருப்பார்கள். பெண்களும் இருந்திருப்பார்கள். குடும்பங்கள் சிதைவு பட்டிருக்கும். எப்போதும் போர் என்கிறபோது கடைசியில் உயிரிழப்புகள்தான் மிஞ்சும். இன்றைக்கு தொழில்நுட்ப போர்க்காகாலமாகும். பாகிஸ்தான் டிரோன்களை இடைமறித்து அழித்தாலும் அவை விழுகின்ற இடத்தில் இந்திய கிராமங்கள் தானே இருக்கும். அல்லது பாகிஸ்தான் கிராமங்கள் தான் இருக்கும். இந்த போரில் பொதுமக்கள் உயிரிழப்பு இல்லை என்று சொல்வது தவறாகும்.
இன்றைக்கு கூட உரி பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக மனித இனத்தின் பேரழிவு என்பது போர். நேற்று முன்தினம் முதல் 2ஆம் உலகப்போரில் ஜெர்மனி அதிகாரப்பூர்வமாக சரணடைந்த தினமாகும். ரஷ்யா அதை பெரிதாக கொண்டாடினார். 2ஆம் உலகப்போரில் வெற்றி பெற்றதை வின்ஸ்டன் சர்ச்சில் தேர்தலுக்காக பயன்படுத்த விரும்பினார். ஆனால் அடுத்த சில மாதங்களில் நடைபெற்ற பிரிட்டன் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். அதற்கு காரணம் மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களாகும். போர்க்காலத்தில் தேசப்பற்று இருந்தது. போர் முடிந்த அடுத்த சில மாதங்களில் அவரவர்களின் பசி – பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் அரசு மீது வெறுப்பை ஏற்படுத்தி விடும்.
1965ஆம் ஆண்டு பாகிஸ்தான் போரின்போது லால் பகதூர் சாஸ்திரி பெரிய ஹீரோவாக இருந்தார். அடுத்து 1966ல் தமிழ்நாட்டில் நடைபெற்ற அனைத்து இடைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி தோற்றது. 1967ல் பொதுத்தேர்தலிலும் தோற்றது. அதற்கு காரணம் அரிசி பஞ்சமாகும். அதற்கு காரணம் போர், போர்ச்சூழல் மற்றும் அதற்கு பிறகு நிலவிய பொருளாதார மந்தமாகும். எந்த ஒரு போராக இருந்தாலும் அது கடைசியில் பொருளாதார மந்த நிலையைதான் விட்டுச்செல்லும். பிரிட்டனிலும் அதுதான் நடைபெற்றது. சர்ச்சில் தோல்வியடைந்தார். அப்போது போர் என்பது புலகாங்கிதம் பட வேண்டிய விஷயமில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.