விடுமுறை கால அமர்வு அவசர வழக்குகளை மட்டுமே விசாரிக்க வேண்டிய சூழலில், நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வு துணை வேந்தர்கள் நியமன விவகார வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது ஏன் என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- ஏன் இந்த வழக்கில் இவ்வளவு அவசரம் காட்டுகிறார்கள் என்பது புரியாத புதிராக தான் உள்ளது. இந்த வழக்கை தாக்கல் செய்த முறை, வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு நடந்துகொண்ட முறை ஆகியவை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். நீதித்துறையின் மாண்பை பொதுமக்கள் மத்தியில் சீர்குலைத்துள்ளது. வழக்கை தாக்கல் செய்தவர் நெல்லை மாவட்ட பாஜக செயலாளர் வெங்கடாஜலபதி. மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக தமிழக அரசுக்கும், ஆளுநர் – மத்திய அரசுக்கும் இடையே தீவிரமான பிரச்சினை பல ஆண்டுகளாக நடைபெற்று, உச்சநீதிமன்றத்தில் அதற்கான தீர்வு கிடைக்கப்பெற்றது. தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்ததை பொறுக்க முடியாமல் ஆர்எஸ்எஸ் பாஜகவினர் சமூக வலைதளங்களில் எதிர் வினை ஆற்றினர்.
அந்த தீர்ப்பை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை தேவையற்ற முறையில் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விளக்கம் கோரினர். குறிப்பாக ஆளுநர் தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தலையிடும் உரிமையை தடுத்துள்ளது. உயர் கல்வித்துறையில் குழப்பம் செய்து, தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கல்வி கிடைக்கக்கூடாது என்பதற்காக ஆர்எஸ்எஸ் அஜெண்டாவில் ஆளுநர் ரவி வேலை செய்து கொண்டிருந்தார். அதற்கு ஒரு மிகப்பெரிய தடையாக திமுக அரசின் சட்டப் போராட்டம் உச்சநீதிமன்றத்தில் வென்றது அவர்களால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. ஏற்கனவே ஒரு வழியில் முயற்சித்து பார்த்தார்கள். அதற்கு உச்சநீதிமன்றம் பதில் அளிக்க வேண்டியது இல்ல என்று ஓய்வுபெற்ற நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர். அடுத்து இன்னொரு வழியை பாஜக தேர்ந்தெடுக்கிறது. ஒரு பாஜக மாவட்ட தலைவர், நயினார் நாகேந்திரனிடம் பேசாமலோ, ஆர்எஸ்எஸ் தலைமை கேட்காமலோ இந்த வழக்கை தொடுத்திருக்க மாட்டார்கள். ஆர்எஸ்எஸ் தலைமையின் ஒப்புதலை பெற்று பாஜக வழக்கை தாக்கல் செய்துள்ளது. ஏனென்றால் அவ்வளவு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு ஆகும்.
இந்த வழக்கை எங்கு தாக்கல் செய்வது என்று முடிவு எடுக்கிறார்கள். பாஜக மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் நெல்லையில் வசிப்பவர். அவர் வழக்கமாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கை தாக்கல் செய்வார்கள். ஆனால் பாஜக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நிஷாபானு அமர்வு, கோடை கால முதல் அமர்வு, 2வது அமர்வுகளை தவிர்க்கின்றனர். பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் கோடைகால அமர்வை புறக்கணித்தனர். 2வது கோடை கால அமர்வில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமிநாராயணன் தலைமையிலான அமர்வை பாஜக தலைமை தேர்வு செய்து, மனுவை தாக்கல் செய்கிறார்கள். இதற்கு நீதித்துறை மொழியில் ஃபோரம் ஷாப்பிங் என்று பெயர். இந்த நீதிபதியிடம் சென்றால் தான் நமக்கு உத்தரவு கிடைக்கும் என்று தேர்வு செய்யும் நிலையில் நீதித்துறை உள்ளது, அது நீதித்துறை மீதான மாண்பை சீர்குலைத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவை பதிவு செய்கிறபோது, உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் இதை நீங்கள் மதுரையில் தான் தாக்கல் செய்ய வேண்டும் என்று தடுத்து இருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமிநாராயணன் அமர்வு இந்த வழக்கில் மனுதாரருக்கு நீதி வழங்க முடியும் என்றால், நீதிபதிகள் கே.கே.ராமகிருஷ்ணன் வேல்முருகன் ஏன் நீதி வழங்க முடியாது. அவர்கள் மீது ஏன் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை. இந்த சந்தேகம் எல்லோருக்கும் ஏற்படுகிறது. உயர்நீதிமன்ற பதிவாளர் இதை எப்படி அனுமதி வழங்கினார் என்று விசாரணை நடத்தப்பட வேண்டும். இதை நீதிபதிகளும் மறுக்கவில்லை. அவர்களுக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் யுஜிசியின் விதிமுறைகள் செல்லாது என்கிற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க கோரி நாங்கள் டிரான்ஸ்பர் பெட்டிஷன் போட்டுள்ளோம். இதனை உயர்நீதிமன்றத்தில் சொல்லுமாறு தலைமை நீதிபதி தன்னிடம் சொன்னதாக மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார். ஆனால் அதையும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏற்கவில்லை. சவுக்கு சங்கர், செல்வப்பெருந்தகை தொடர்பு உடைய ஒரு நிறுவனத்திற்கு பணம் கொடுத்ததில் முறைகேடு என்று மனுதாக்கல் செய்கிறார். அந்த மனுவில் இதே நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதிக்கிறார்கள். இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்திற்கு செல்கிறபோது, தலைமை நீதிபதி கவாய் இந்த வழக்கில் என்ன அவசரம் உள்ளது என்று கேள்வி எழுப்புகிறார். அப்படி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சொன்ன பிறகும் உயர்நீதிமன்றம் இந்த மனுவை விசாரிக்கிறது என்றால் என்ன அர்த்தம். இதேபோல், கரூர் எச்சில் இலை வழக்கும் ஃபோரம் ஷாப்பிங் என்கிற முறையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனிடம் கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கில் காவல்துறையை சேர்க்கிறார். அப்படி சேர்த்தால், அது வேறு நீதிபதிக்கு வழங்க வேண்டும். நீதித்துறை மரபு அது.
துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசு நியமிப்பதன் மூலம் பல்கலைக் கழகத்தை அரசியல் களமாக மாற்றுவதாக பாஜக தரப்பில் தெரிவிக்கிறார்கள். பல்கலைக் கழகத்தை அரசியல் களமாக மாற்றியது ஆளுநர் ஆர்.என்.ரவிதான். அனைத்து பல்கலைக் கழகங்களிலும் துணை வேந்தர் ஆதரவு குழுக்களை உருவாக்கினார்களா?இல்லையா? இன்றைக்கு ஊழல் துணை வேந்தருக்கு ஆளுநர் பாராட்டு விழா நடத்துகிறார். அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களுக்கு பள்ளிக்கல்வியும், உயர்கல்வியும் கிடைக்கக்கூடாது. பள்ளிக் கல்வியை பணம் கொடுக்காமல் காலி செய்கிறார்கள். உயர் கல்வியை ஆளுநரை வைத்து காலி செய்கிறார்கள். இரண்டாவது நீதிபதியின் சகோதரர் ராகவாச்சாரி, பாஜகவின் மூத்த வழக்கறிஞர். அவரது சகோதரி பாஜக ஆதரவு நிலைப்பாடு கொண்டவர். நீதிபதி லட்சுமி நாராயணன் வழக்கறிஞராக இருந்தபோது ஆளுநரால் சிண்டிகேட் மெம்பராக பொறுப்பு வழங்கப்பட்டது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தன்னை ஆர்எஸ்எஸ் பின்னணியில் வந்தவர் வெளிப்படையாக அறிவித்து, திராவிட இயக்க வெறுப்பை பேசியுள்ளார். இன்று வரை ஆர்எஸ்எஸ் நிகழ்வுகளில் பங்கேற்கிறார். எனவே இந்த 2 நீதிபதிகளும் இந்த வழக்கை எடுத்தது, நீதித்துறையின் மதிப்பை சீர்குலைக்கும் இதனால் எந்த பயனும் வரப் போவதும் இல்லை. இந்த வழக்கை உச்சநீதிமன்த்தில் மேல்முறையீடு செய்தால் நிச்சயமாக தடை விதிப்பார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.