காவல் துறையில் சுமார் 8 ஆண்டுகள் பணியாற்றிய டோனி என்கிற டாபர்மேன், (மோப்பனாய்) இருதயநோய் காரணமாக உயிரிழந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
![ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.](https://apcnewstamil.com/wp-content/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-10-at-6.28.20-PM-300x200.jpeg)
இது குறித்து ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது. டோனி என்கிற டாபர்மேன், (மோப்பனாய்) காவல்துறையில் 8 ஆண்டுகள் பணியாற்றி உள்ளது. சென்னை மாநகர காவல் மோப்ப நாய் பிரிவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான டோனி, சென்னை மாநகர காவலில் இருந்து பிரிந்து 02.05.2022 அன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மோப்பநாய் பிரிவில் சேர்க்கப்பட்டது. டோனி 20.02.2014 அன்று பிறந்து 45 நாட்கள் ஆன நிலையில் மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்பட்டு, ஒரு சிறந்த துப்பறிவாளராக பணியாற்றி உள்ளது.
![கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகள் உட்பட கிட்டத்தட்ட 35 வழக்குகளில் விசாரணைக்கு உதவியாக டோனி செயலாற்றி உள்ளது.](https://apcnewstamil.com/wp-content/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-10-at-6.28.17-PM-300x200.jpeg)
மேலும் கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகள் உட்பட கிட்டத்தட்ட 35 வழக்குகளில் விசாரணைக்கு உதவியாக டோனி செயலாற்றி உள்ளது.
2017 ஆம் ஆண்டில் டோனி மாநில அளவில் காவல்துறையில் திறன் போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்றது. மேலும் 2020ல் அடையாறில் நடைபெற்ற கெனல் கிளப்மீட்டில் இரண்டாம் இடத்தை பெற்றது.
ஆவடி காவல் ஆணையாளர் சாந்திப் ராய் ரத்தோர் அவர்கள் டோனியின் சிறப்பான சேவைகளை நினைவுகூர்ந்து நன்றியை தெரிவித்தார். ஆவடி காவல் ஆணையரக அதிகாரிகள் மற்றும் டோனியின் பயிற்சியாளர் தலைமை காவலர் தனசேகர் மலர் தூவி இறுதி மரியாதை செலுத்தினர். மேலும் இறந்த டோனியின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.