ஆவடி அருகே 21வயது பெண் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி அருகிலுள்ள திருமுல்லைவாயல், சிவசங்கரபுரம் பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் சுபா தம்பதியர், இவர்களின் மகளான ஸ்வேதா வயது 21 என்பவர் இந்த கல்வி ஆண்டில் சென்னை செம்மஞ்சேரி அருகில் உள்ள சத்யபாமா கல்லூரியில் பி.காம் பட்ட படிப்பு முடித்து வேலை தேடி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று ஸ்வேதா அம்பத்தூர் பகுதியில் தனியார் நிறுவன நேர்முகபணி தேர்வுக்கு சென்று வந்துள்ளார்.தேர்வை சந்தித்த பின் வீட்டிற்கு வந்த ஸ்வேதா தனது உறவினருக்கு தொலைபேசியில் அழைப்பு கொண்டு பேசியுள்ளார். அதில் தேர்வில் அதிக நபர்கள் கலந்து கொண்டதாகவும் தனக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் உள்ளது எனவும் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கவலையோடு இருந்த ஸ்வேதா நேற்று மாலை 5 மணியளவில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து இறந்துள்ளார்.இதனை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து உடனே அருகில் உள்ள திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஸ்வேதாவின் உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய உடற்கூர் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் ஸ்வேதா இறப்பதற்கு முன் கடிதம் ஒன்றை எழுதி வைத்ததாகவும் அதில் தன் குடும்பத்திற்கு தான் பாரமாக உள்ளதாகவும்,அதன் சூழ்நிலையால் கவலையில் இருந்ததாகவும், தன்னுடைய தங்கை பணிக்கு சென்று குடும்ப சூழ்நிலையை பார்த்துக் கொள்கிறாள், தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை, என்ற ஏக்கம் உள்ளுக்குள் வைத்துக் கொண்டு இருந்ததாகவும், என்னால் குடும்பத்திற்கு உதவி செய்ய முடியவில்லை என எண்ணி கவலைப்படுவதாகவும் மேலும் இனியும் தங்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை, என்னை மன்னித்து விடுங்கள் என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை எனவும், வீட்டில் உள்ள பூனை குட்டியை நன்றாக பார்த்துக் கொள்ளவும்.
இனி என்னை பற்றி கவலைப்பட வேண்டாம் எனவும் மனவருத்தத்துடன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதம் குறித்தும் ஸ்வேதாவின் மரணம் குறித்தும் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் இது ஸ்வேதாவின் கையெழுத்து தானா அல்லது மரணத்தில் வேறு ஏதேனும் காரணம் உண்டா என போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனையடுத்து ஸ்வேதாவின் உறவினர்கள் மரணத்தின் மர்மம் குறித்து தகவல் அறிந்து கொள்ள காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உள்ளனர்.இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஸ்வேதா திருமுல்லைவாயல் அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பில் மாவட்டத்திலேயே முதலிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.