கோவையில் பாலியல் வன்முறைக்கு ஆளான கல்லூரி மாணவிக்கு சட்ட உதவி செய்வதாக கூறி ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கட்டிடகலை படித்து வரும் 23 வயது இளம்பெண் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்தவழக்கில் தனது படிப்பு தொடர்பாக, ப்ராஜ்கட் செய்ய அனந்த கிருஷ்ணன் என்பவர், உதவி செய்ய முன் வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
கட்டிடக்கலை தொழிலில் இருப்பதாக கூறிய அவர், தன்னை ஏமாற்றி பாலியல் வன்முறை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அதை வீடியோவாக எடுத்து வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அந்த பெண், வீடியோ காட்சிகளை பெற்றோர்கள் மற்றும் கல்லூரி, இணையதளங்களில் பதிவிட்டு விடுவேன் என்றும் மிரட்டியதாகவும், இது தொடர்பாக சட்ட உதவிக்காக வழக்கறிஞர் மனோஜ் பாண்டி என்பவரை அணுகியதாக தெரிவித்துள்ளார்.
தனக்கு உதவி செய்வதாக கூறிய வழக்கறிஞர் மனோஜ் பாண்டி, சமாதானம் செய்வதாக கூறி சம்பந்தப்பட்ட அனந்த கிருஷ்ணனுடன் சேர்ந்து தனக்கு எதிராக புகார் அளித்து, தான் சிறையில் அடைக்கப்பட்டதாக சுட்டிக்காட்டி உள்ளார். தான் 53 நாட்கள் சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாகவும் ,அதேபோல் பார் கவுன்சிலுக்கும் புகார் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார் ..
இது குறித்து உயர்நீதிமன்ற உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டு இருந்தார்.இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் மற்றும் நீதிபதி ஜோதி ராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும் என்றும், உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோவை நகர காவல் துறை ஆணையரையும், தெற்கு துணை ஆணையரையும் வழக்கில் சேர்க்குமாறு உத்தரவிட்டுள்ளனர். வழக்கு விசாரணையை அடுத்த வாரம் ஒத்திவைத்துள்ளனர்.
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா? பின்வாங்கும் மத்திய அமைச்சர் எல்.முருகன்