போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படுகிறது.இந்த புதிய பேருந்து நிலையத்திற்கு, கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அமர்ந்த நிலையில் எழுதுவது போன்று மூன்றரை அடி உயரம் கொண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், ஒரே நேரத்தில் 400 அரசுப் பேருந்துகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளை கையாள முடியும். நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்ல ஏதுவாக இடவசதி உள்ளது. பிரதான கட்டடத்தின் அடித்தளங்களில், ஆயிரம் கார்கள் மற்றும் 2 ஆயிரம் இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தாய்மார்கள் பாலூட்டும் அறை, திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.பேருந்து நிலையத்திற்குள்ளேயே அவசர சிகிச்சை மையமும், மருந்தகமும், 24 மணி நேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ் வசதியும் உள்ளது. இதே போன்று, பயணிகளுக்கான குடிநீர் வசதி, செல்போன் சார்ஜிங் வசதி, உணவகம், தேநீர் விடுதிகள் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், மாநகர பேருந்துகள் வந்து செல்வதற்கென தனி நடைமேடைகளும் உள்ளன.
மாநகரப் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் பேருந்து நிலையத்திற்கு செல்ல எஸ்கலேட்டர் வசதியும், அதிக பாரத்தை கொண்டு செல்ல லிப்ட் உள்ளிட்ட அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையத்தில் மொத்தம் ஆறு மின்தூக்கிகளும், ஒரு எஸ்கலேட்டரும் பயன்பாட்டில் உள்ளது .இதேபோன்று, பயணிகள் ஓய்வறை, ஓட்டுநர் – நடத்துநர் ஓய்வறை, பேருந்து பணிமனைகளும் இடம்பெற்றுள்ளன. இதனிடையே, பேருந்து நிலைய கட்டடத்திற்குள், தமிழ்நாட்டின் பண்பாட்டை விளக்கும் ஓவியங்களும் கண்களைக் கவர்கின்றன. பயணிகளின் பாதுகாப்பிற்காக பேருந்து நிலையம் முழுவதும் 150 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன, பேருந்து நிலைய வளாகத்தில் புறநகர் காவல் நிலையமும், விநாயகர் கோயிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.