மஞ்சள் நீராட்டு விழாவில் விருந்து அளிப்பதில் மோசடி செய்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபருக்கு மொத்தமாக 1,67,860 ரூபாய் இழப்பீடு வழங்க தனியார் உணவகத்திற்கு திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த நித்திய செல்வி பாலமுருகன் அவர்களின் மகளான ஜெசிகா ஸ்ரீ என்பவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு
அக்டோபர் 10ஆம் தேதி அம்பத்தூரில் உள்ள திருவிழா உணவகத்தில் உள்ள நிகழ்ச்சி அறையில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.
அப்போது அன்றைய தினம் உறவினர்களுக்கு விருந்து அளிப்பதற்காக
திருவிழா உணவகத்தில் 230 பேருக்கு அசைவ உணவு ஆர்டர் செய்து அதற்கான பில் முன் தேதியில் கட்டி உள்ளனர்.
அன்றைய தினம் நிகழ்ச்சிக்கு வந்த
நபர்களுக்கு மதியம் ஆர்டர் செய்த உணவகம் சார்பில் அசைவ உணவு பரிமாறப்பட்டது.ஆனால் முதல் பந்தியில் அமர்ந்த 90 பேருக்கு மட்டுமே முறையாக அசைவ உணவு பரிமாறப்பட்டுள்ளது.
பின்னர் நிகழ்ச்சிக்கு வந்த நபர்களுக்கு நீண்ட நேரம் வாழை இலை போட்டும் உணவு பரிமாறவில்லை என கூறப்படுகிறது.
இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஆர்டர் கொடுத்த திருவிழா உணவகத்தில் கேட்டதற்கு ஆர்டர் செய்த 240 பேருக்கும் உணவு பரிமாறப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நிகழ்ச்சி உரிமையாளர் வருகை தந்த உறவினர்களுக்கு அருகில் உள்ள உணவகத்தில் பார்சல் உணவு வாங்கி வந்து அளித்துள்ளனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட நபர் 230 பேருக்கு ஆர்டர் செய்த அசைவு உணவை 90 பேருக்கு மட்டும் பரிமாறப்பட்டது. மீதி 140 பேருக்கு உணவு பரிமாறாமல் மோசடி செய்ததாக சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதிப்படுத்தி உள்ளனர்.
அத்தகைய உணவாகம் மீது நடவடிக்கை எடுத்திட கோரி சிசிடிவி ஆதாரத்துடன் பாதிக்கப்பட்ட நபர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரைப் பெற்ற அம்பத்தூர் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் உணவக உரிமையாளர் அதற்கான தொகையை திருப்பி அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.
ஆனால் காவல் நிலையத்தில் உறுதி அளித்தபடி அதற்கான பணத்தை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.இதனால் அவர் தனது வழக்கறிஞர் மூலமாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் எந்தவித பதிலும் உணவகத்திடம் இருந்து வராததால்
பாதிக்கப்பட்ட நபர் உணவுக்காக செலவு செய்த 1,39,325 ரூபாய் தொகை திருப்பி அளித்திட கோரியும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதற்காக நஷ்ட ஈடாக
5 லட்சம் வழங்கிட கோரி திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றம் மனுதாரர் சமர்ப்பித்த சிசிடிவி காட்சிகள் பணம் செலுத்தியதற்கான கூகுள் பே வங்கி பரிவர்த்தனை காவல் நிலையத்தில் அளித்த புகார் வக்கீல் நோட்டீஸ் நகல் ஆகியவை அடிப்படையில் விசாரணை செய்தனர்.
வாடிக்கையாளர் சமர்ப்பித்த ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை செய்ததில் உணவகம் மோசடி செய்தது நிரூபணம் ஆனதால் உணவகத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு அளிக்காத மீதி உணவுக்கான தொகை 57,860 ரூபாய் வாடிக்கையாளரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது 1 லட்சம் ரூபாய் மற்றும் வழக்கு செலவுக்காக 10 ஆயிரம் என மொத்தமாக 1,67,860 ரூபாய் நஷ்டஈடு வழங்கிட வேண்டும் என்றும் அத்தகைய நஷ்ட ஈடு தொகையை ஆறு மாதத்திற்குள் வழங்க தவறினால் 9 சதவீதம் வட்டியுடன் மொத்த தொகையை வழங்கிட வேண்டுமென திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி லதா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
ஆர்டர் செய்த அசைவ உணவை பரிமாறாமல் மோசடி செய்த உணவகத்தின் மீது தொடுத்த வழக்கில் திருவள்ளுர் நுகர்வோர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட நபருக்கு மொத்தமாக 167860 இழப்பீடு வழங்கிட கோரி அளித்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.