நீர் வழித்தடங்களை தடுக்கும் தாவரங்கள் உள்ளிட்ட குப்பை கழிவுகளை நீரிலும் நிலத்திலும் இயங்கி அகற்றும், நவீன ரக இயந்திரங்களின் பயன்பாட்டை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சென்னையில் துவக்கி வைத்தார்.பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நீர் நிலைகளைத் தூர்வாரும் பணிக்காக 3 புதிய ஆம்ஃபிபியஸ் எஸ்கவேட்டர் (Amphibious Excavator) இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. முதன்முறையாக இதன் பயன்பாட்டை, சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகர் அருகில் உள்ள மாம்பலம் கால்வாயில், அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் பெரிய மற்றும் சிறிய வகையிலான கால்வாய், குளம் மற்றும் ஏரி ஆகிய நீர்நிலைகளில் படிந்துள்ள சேறு, சகதி, மிதக்கும் தாவரங்கள், கழிவுப் பொருட்கள் மற்றும் பிற மிதக்கும் பொருட்களை அகற்றி சுத்தப்படுத்துவதற்கு, 7 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று ஆம்ஃபிபியஸ் எஸ்கவேட்டர் இயந்திரங்களின் சேவை துவங்கப்பட்டுள்ளது.

நீரிலும் நிலத்திலும் இயங்கக் கூடிய இந்த உபகரணம், நீர்நிலைகளில் அடைப்பை அகற்றி, தூர்வாருவது மட்டுமல்லாமல் நிலப்பரப்பில் பள்ளம் தோண்டுதல், நிலத்தை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் மேற்கொள்ளும் சிறப்பம்சங்களை கொண்டதாகும்.
மேலும், மழைக்காலம் நெருங்கும் நிலையில் சென்னை நகரில் தண்ணீர் தேங்குவதை தடுப்பதற்காக நீர் நிலைகளை சுத்தப்படுத்தும் பணியில் இந்த புதிய உபகரணங்கள் பெரிதும் பயன்படும் என அமைச்சர் நேரு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், துணை மேயர் மகேஷ் குமார், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.