சென்னை செம்மொழி பூங்காவில் நாளை முதல் மலர் கண்காட்சி
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் இரண்டாவது ஆண்டாக மலர் கண்காட்சி, ஜூன் 3-ல் தொடங்கி, 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவில், இந்த மூன்று நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடந்த வருடம் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மலர் கண்காட்சியை, 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் கண்டுகளித்ததையொட்டி, மலர் கண்காட்சியை ஆண்டாண்டு நடத்த, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதத்தில், செம்மொழி பூங்காவில் இந்த மலர் கண்காட்சியை தமிழ்நாடு தோட்டக்கலை துறை நடத்துகிறது.
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலை பிரதேசங்களில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் மலர் வகைகள் இங்கே கண்காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. தலைநகரில் இருந்து ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு பணிச் சுமையின் காரணமாக செல்ல முடியாதவர்கள், இதில் பயன்பெறுவர்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது” எனக் கூறினார்.