போக்குவரத்து துறையின் நிதி நிலைக்கு ஏற்ப ஓய்வுப்பெற்ற தொழிலாளர்களுக்கு படிப்படியாக பணப்பலன்கள் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த மே 2020 ஆம் ஆண்டு முதல் மார்ச் 2021 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்து விருப்பு ஓய்வு (Voluntary Retirement Scheme) பெற்ற பணியாளர்கள், இறந்த பணியாளர்கள் என மொத்தமாக 1241 தொழிலாளர்களுக்கு இன்று காசோலை வழங்கப்பட்டது.

இதற்காக 242 கோடியே 67 லட்சம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் இறந்த பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு தொகை உள்ளிட்ட பணப்பலங்களுக்குரிய காசோலைகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
பின்னர், போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு தனியார் நிறுவனம் சார்பாக “மிஷன் சென்னை” (MISSION CHENNAI) என்னும் திட்டத்தின் கீழ் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் மருத்துவ வாகன சேவையையும் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறையின் நிதி நிலைமை காரணமாக, மீதமுள்ள ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கும் ஓய்வூதிய பலன்கள் மற்றும் நிலுவைத் தொகை படிப்படியாக வழங்கப்படும்.
போக்குவரத்து துறையின் நிதிநிலைமை மற்றும் தொடரும் டீசல் விலையேற்றம் சூழலிலும் பேருந்து சேவைக் கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளது என தெரிவித்தார்.