தனியார் பள்ளிகளுக்கு இணையாக, தொடர்ந்து 3வது ஆண்டாக மார்ச் மாதத்தின் தொடக்கத்தில், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இதனை தொடங்கி வைத்தார்.
2024-25ம் கல்வியாண்டிலிருந்து, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் மாணவர் சேர்க்கை திருவிழாவை பள்ளிக் கல்வித் துறை நடத்தி வருகிறது. பல்வேறு மாணவர் நலத் திட்டங்கள், அரசு பள்ளிகளில் படிப்பதால் கிடைக்கக்கூடிய சலுகைகள், உயர்கல்வி வாய்ப்புகள், பள்ளிகளில் மாணவர்களுக்கான நவீன வசதிகள் ஆகியவை குறித்து மக்களைடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் அதிக அளவில் மாணவர்களை அரசு பள்ளிகளில் பெற்றோர் சேர்த்தனர். கடந்த 2 ஆண்டுகளில் இதற்கு பெரும் வரவேற்பு இருந்த நிலையில், மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கை திருவிழா இந்த ஆண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் நரேஷ் அனுப்பிய சுற்றறிக்கையில், அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5 வயது பூர்த்தி அடைந்த மற்றும் பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 ந் தேதி முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
2026-27ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை ஒவ்வொரு பள்ளியிலும் 2.3.2026 முதல் தொடங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை அந்தந்தக் குடியிருப்புப் பகுதிகளில் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்கை செய்ய வேண்டும். அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர விரும்பும் குழந்தைகள் ஒன்றாம் வகுப்பு அல்லாது பிற வகுப்புகளுக்கு சேர விரும்பினாலும் சேர்க்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு நலத்திட்டங்கள், திறன் வகுப்பறைகள் (Smart Class Rooms), உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்கள் (HI-Tech Labs), டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கம்ப்யூட்டர் சார் அடிப்படை அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தும் TN – SPARK திட்டம் உள்ளிட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு கல்வி உதவித் தொகைகள் போன்றவை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டைவிட குறைந்தபட்சம் 50 மாணவர்களைக் கூடுதலாக சேர்க்கை செய்யும் அரசுப் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசால் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை ஊக்குவித்து 2026-27ம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் கணிசமான அளவில் மாணவர் சேர்க்கை விகிதத்தினை அதிகரித்திட வேண்டும் என மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் சைதாப்பேட்டை ஆலந்தூர் சாலையில் உள்ள அரசு உதவிப்பெறும் சிஎஸ்இ நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.
திமுக ஆட்சியில் 58 மாதத்தில் 3400 ரேசன்கடைகள் திறக்கப்பட்டன – அமைச்சர் சக்கரபாணி தகவல்


