சென்னை மெரினா கடற்கரை மணற்பரப்பில் இன்று அதிகாலை நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பதாகையுடன் முழக்கமிட்ட சட்ட மாணவரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட அந்த மாணவரைப் போலீசார் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
அதிகாலையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல்
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் அக்ஷய் (21). இவர் தரமணியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டப் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு எல்.எல்.பி. படித்து வருகிறார். இந்நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்ட அக்ஷய், தான் மெரினா கடற்கரையில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாகத் தெரிவித்துவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.

பதாகையுடன் முழக்கம்
இதையடுத்து, இரவு ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக உஷார்படுத்தப்பட்டு, மெரினா கடற்கரை மணற்பரப்பில் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை பின்புறம் ‘BAN NEET’ (நீட் தேர்வை தடை செய்) என எழுதப்பட்ட பதாகையுடன் முழக்கமிட்டுக் கொண்டிருந்த மாணவர் அக்ஷயைக் காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர்.
எச்சரித்து வீடு திரும்பிய போலீசார்
உரிய அனுமதி பெறாமல் பொதுமக்களின் கூடும் இடங்களில் இதுபோன்று போராட்டங்களிலோ அல்லது தர்ணாவிலோ ஈடுபடக் கூடாது என மாணவருக்குக் காவல்துறையினர் கடுமையான அறிவுரைகளை வழங்கினர். மேலும், விசாரணையின்போது தேவைப்படும் பட்சத்தில் மெரினா காவல் நிலையத்திற்கு நேரில் வந்து ஆஜராக வேண்டும் எனத் தெரிவித்துவிட்டு, மாணவர் அக்ஷயைப் பாதுகாப்பாக அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அனுமதியின்றி நடைபெற்ற இந்த திடீர் போராட்டத்தால் மெரினா கடற்கரைப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
