நடிகர் சூர்யா வீட்டில் மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் நடிப்பின் நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சூர்யா. இவருடைய நடிப்பில் கடைசியாக ரெட்ரோ திரைப்படம் வெளியானது. அடுத்தது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் கருப்பு திரைப்படம் வெளியாகும் என பல தகவல்கள் பரவி வருகிறது. இது தவிர வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனது 46வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இவ்வாறு பிசியாக பணியாற்றி வரும் சூர்யாவின் வீட்டில் மோசடி நடந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

அதாவது நடிகர் சூர்யாவின் தனி பாதுகாவலராக இருந்து வருபவர் அந்தோணி ஜார்ஜ். அதேசமயம் சூர்யா வீட்டில் சுலோக்சனா என்ற பெண்ணும் பணிபுரிந்து வருகிறார். அதில் சுலோக்சனா, அந்தோணி ஜார்ஜிடம் ரூ.5500 -க்கு தங்க நாணயம் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை காட்டி அவரிடமிருந்து பணத்தைப் பெற்றுள்ளார். சொன்னபடி சுலோக்ஷனாவும் தங்க நாணயத்தை வழங்கியுள்ளார். அதன் பிறகு சுலோக்சனா ரூ.42 லட்சத்தை ரொக்கமாக கேட்க, வங்கி மூலம் சுலோக்சனாவிற்கு அந்த பணத்தையும் கொடுத்துள்ளார் அந்தோணி ஜார்ஜ். ஆனால் இந்த முறை சுலோக்ஷனா தங்க நாணயங்களை வழங்காமல் இழுத்தடித்து மோசடி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாவலர் அந்தோணி ஜார்ஜ, சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் சுலோக்ஷனாவையும், அவருடைய மகன்கள் பாலாஜி, பாஸ்கர், சகோதரி விஜயலட்சுமி ஆகிய நான்கு பேரையும் கைது செய்துள்ளனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்த போது, இந்த கும்பல் ஏற்கனவே பலரையும் ஏமாற்றி ரூ. 2.50 கோடி வரை மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.