சிம்பு, ஜூட் ஆண்டனி கூட்டணியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு மலையாள சினிமாவில் டோவினோ தாமஸ் நடிப்பில் 2018 எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியிருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெரு மழையையும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தையும் மையமாக வைத்து உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று குறுகிய நாட்களிலேயே அதிக வசூலை பெற்று தந்து பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப், லைக்கா நிறுவனத்துடன் கைகோர்த்து புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார் என்று அறிவிப்பு வெளியானது. இருப்பினும் படமானது அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. அதே சமயம் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்திடம் ஜூட் ஆண்டனி கதை ஒன்றை சொல்லியதாகவும் அந்த கதையில் நடிகர் சிம்பு நடிக்கப் போவதாகவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. அதைத் தொடர்ந்து அந்த படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்று சொல்லப்பட்டது. மேலும் இந்த படம் குறித்து ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது சிம்பு, ஜூட் ஆண்டனி கூட்டணியில் உருவாக இருந்த புதிய படமானது பட்ஜெட் பிரச்சினை காரணமாக இந்த படமும் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை என்று தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் சிம்புவிற்கு பதிலாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க போவதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது ஏற்கனவே ரஜினி, வேல்ஸ் நிறுவனத்திற்கு படம் ஒன்று பண்ணித் தருவதாக கமிட்டாகி இருந்ததன் காரணமாக இந்த ப்ராஜெக்ட் ரஜினிக்கு கை மாறியதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது.
இருப்பினும் படமானது எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த மற்ற தகவல்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.